செய்திகள்,திரையுலகம் ஆம்பள (2015) திரை விமர்சனம்…

ஆம்பள (2015) திரை விமர்சனம்…

ஆம்பள (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஊட்டியில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்கள் சேர்த்துவிடும் பணியை செய்து வருகிறார் விஷால். இதே ஊரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் ஹன்சிகாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். விஷாலுக்கு போட்டியாக இன்ஸ்பெக்டரான சந்தானம், ஹன்சிகாவை காதலிக்கிறார்.ஹன்சிகாவை காதல் வலையில் சிக்க வைக்க சந்தானம், விஷாலிடம் ஐடியா கேட்கிறார். ஆனால் விஷாலோ சந்தானத்தின் மனதை மாற்றிவிடுகிறார். அதன்பின் ஹன்சிகாவை சுற்றி சுற்றி வந்து தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார் விஷால். இருவரும் காதலித்து வருகிறார்கள்.இதை பார்க்கும் சந்தானம் இவர்கள் காதலை பிரிக்க திட்டமிடுகிறார். அதன்படி வைபவின் துணையுடன் இவர்கள் காதலை பிரிக்கிறார். ஹன்சிகாவை பிரிந்த சோகத்தில் வாடும் விஷால் மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்கிறார். விஷாலை பார்த்து கோபமடையும் விஷாலின் அம்மா, நீ இப்படி குடித்து கெட்டுப் போகவா உன் அப்பா, தம்பிகளிடம் இருந்து பிரிந்து வந்தேன் என்று கூறுகிறார்.

மேலும் உன் அப்பா பிரபு மதுரையில் ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர் என்றும், அவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததால் அவரிடம் சண்டைப் போட்டு உன்னை பிரித்து கூட்டிட்டு வந்தேன் என்றும் கூறுகிறார்.இதன்பிறகு தன் அப்பாவை தேடி மதுரைக்கு செல்கிறார் விஷால். ஆனால் அங்கு பிரபு ஊரில் இருப்பவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். தன் தந்தையை சந்திக்கும் விஷால், அவருடன் தன் தம்பிகளான வைபவும், சதீஷும் சேர்கிறார்கள். அதன்பின் சொத்துக்கள் என்ன ஆனது என்று கேட்க, அதற்கு பிரபு, சொத்துக்கள் அனைத்தையும் என் மூன்று தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா இவர்களுக்கு எழுதி வைத்துவிட்டேன். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் என் அப்பாவான விஜயகுமார் மரணமடைய, அது தன்மீது கொலைப் பழியாக மாறி ஜெயிலுக்கு சென்று விட்டேன். இதனால் குடும்பமும் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்.சொத்துக்கள் எல்லாம் மீட்க வேண்டும், பிரிந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்றால், என் தங்கைகளுக்கு மூன்று பெண்கள் உள்ளது. அவர்களை காதலித்து திருமணம் செய்தால் அனைத்தும் கைகூடும் என்று பிரபு, தன் மகன்களிடம் கூறுகிறார்.இதை கேட்டு விஷால், வைபவ், சதீஷ் இவர்கள் மூவரும் தன் அத்தை மகள்களை காதலித்து திருமணம் செய்தார்களா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதை மீதிக்கதை.

படத்தில் வழக்கமான விஷாலையே பார்க்க முடிகிறது. ஆக்‌ஷன், காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தாலும் நகைச்சுவை படம் என்பதால் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். படம் முழுக்க கவர்ச்சியால் ரசிகர்களை கவர்கிறார் ஹன்சிகா. பாடல் காட்சிகளிலும் தாராளம் காண்பித்திருக்கிறார்.சந்தானம், படத்திற்கு தூணாக நின்று காமெடியில் களைகட்டுகிறார். இவர் இல்லாத இடைவெளியில் சதீஷின் காமெடி கைகொடுக்கிறது. பிரபு, வைபவ், ஸ்ரீமன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.அத்தைகளாக வரும் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா இவர்களுக்கு மகள்களாக வரும் மதுரிமா, மாதவி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் நீலாம்பரி சாயல் தெரிகிறது.இயக்குனர் சுந்தர்.சி அவருக்கே உரிய பாணியில் வழக்கமான குடும்பபாங்கான படத்தை இயக்கியிருக்கிறார். காமெடியில் சிறிதளவும் ரசிகர்களை ஏமாற்றாமல் திருப்திபடுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். விஷால் படம் என்பதால் ஆக்‌ஷனில் கார்கள் பறப்பது போன்ற காட்சிகளை வைத்திருக்கிறார். முந்தைய படத்தில் திகில் கலந்த காமெடி படத்தை கொடுத்த சுந்தர்.சி, இப்படத்தில் ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாக்கியிருக்கிறார்.ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவோடு சேர்ந்து பார்க்கும் போது அவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது.

மொத்தத்தில் ‘ஆம்பள’ வீரன்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி