செய்திகள்,விளையாட்டு பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…

பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…

பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!… post thumbnail image
மும்பை:-5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முன்னதாக இலங்கை அணி, மனோஜ் திவாரி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று மோதியது.டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் முதலில் இந்திய ஏ அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி ரோகித் ஷர்மாவும், முன்னாள் ஜூனியர் கேப்டன் உன்முக் சந்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். விரல் மற்றும் தோள்பட்டை காயத்தால் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்த ரோகித் ஷர்மா அதன் பிறகு பங்கேற்ற முதல் ஆட்டம் இது தான்.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் (12.5 ஓவர்) சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். உன்முக் சந்த் 54 ரன்களில் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து ரோகித் ஷர்மாவும், மனிஷ் பாண்டேவும் கைகோர்த்து இலங்கையின் பந்து வீச்சாளர்களை நொறுக்கியெடுத்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. ஆக்ரோஷமாக ஆடிய இவர்களை கட்டுப்படுத்த 10 பவுலர்களை உபயோகப்படுத்தி பார்த்தும் பலன் இல்லை. அபாரமாக ஆடிய 27 வயதான ரோகித் ஷர்மா சதம் அடித்தார். இதன் மூலம் முழு உடல்தகுதியை எட்டி சர்வதேச போட்டிக்கு தயாராகி விட்டதையும் அவர் நிரூபித்துள்ளார்.அணியின் ஸ்கோர் 310 ரன்களாக உயர்ந்த போது ரோகித் ஷர்மா 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன்-அவுட் ஆனார். அவர் 142 ரன்களில் (111 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். இவர்கள் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 214 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது. நிலைத்து நின்று அசத்திய மனிஷ் பாண்டேவும் சதத்தை கடந்தார்.

மறுமுனையில் கேப்டன் மனோஜ் திவாரி 36 ரன்னிலும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), கேதர் ஜாதவ் ரன் ஏதுமின்றியும், சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும் ஒரே ஓவரில் (49-வது ஓவர்) கேட்ச் ஆகி நடையை கட்டினர். ஸ்டூவர்ட் பின்னியும் ஒரு ரன்னில் வீழ்ந்தார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. கர்நாடகாவைச் சேர்ந்த 25 வயதான மனிஷ் பாண்டே 135 ரன்களுடன் (113 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் தமிகா பிரசாத் 3 விக்கெட்டுகளும், லாரு காமகே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி முதல் ஓவரிலேயே குசல் பெரேராவின் (4 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் இலங்கையின் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், இலங்கை பேட்ஸ்மேன்களின் அதிரடி வேகத்தை வெகுவாக முடக்கினர். 50 ஓவர்களில் இலங்கை அணியால் 9 விக்கெட்டுக்கு 294 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ‘ஏ’ அணி எளிதில் வெற்றியை சுவைத்தது.இலங்கை அணியில் அதிகபட்சமாக தரங்கா 76 ரன்களும் (75 பந்து, 13 பவுண்டரி), விக்கெட் கீப்பர் சங்கக்கரா 34 ரன்களும், மஹேலா ஜெயவர்த்தனே 33 ரன்களும், தில்ஷன் 14 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 3 ரன்களும் எடுத்தனர்.இந்திய ‘ஏ’ தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் கரன் ஷர்மா 10 ஓவரில் 2 மெய்டனுடன் 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், பர்வேஸ் ரசூல் 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி