செய்திகள்,விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கிய அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், அந்த போட்டியில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். பின்னர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று களம் திரும்பிய யுவராஜ்சிங்கின் ஆட்டத்தில் பழைய சிறந்த நிலையை காண முடியவில்லை.

இதனால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வரும் யுவராஜ்சிங், கடைசியாக ஒருநாள் போட்டியில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடியிருந்தார். அதன் பிறகு அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் 32 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- இந்திய அணிக்காக இனிமேல் நான் ஒருபோதும் விளையாட முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனை நான் கவனத்தில் கொண்டு தான் இருக்கிறேன். இருப்பினும் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது. அணிக்கு திரும்ப முடியும் என்று நான் எவ்வளவு தூரம் நம்புகிறேனோ, அந்த நம்பிக்கையை எந்த அளவுக்கு மனதில் வைத்து இருக்கிறேனோ அது என்னை இலக்கை எட்ட உந்தி தள்ளிக் கொண்டே இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டத்தில் நான் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறேன்.

அதனால் என்னை அணிக்கு தேர்வு செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இந்த நிலைமைகள் மாறும். அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. தேர்வு பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.என்னால் முயற்சி செய்ய மட்டுமே முடியும். அதனை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். இந்திய அணியில் இடம் பிடித்து உலக கோப்பை போட்டியில் மீண்டும் நான் விளையாடினால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.ஆனால் அது நடக்காமல் போனாலும் வாழ்க்கை கடந்து கொண்டு தான் இருக்கும். இந்திய அணியில் இடம் பிடிக்காமல் போனால் அது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி