செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!… post thumbnail image
நியூயார்க்:-நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.இதில் பாதுகாப்பு கவுன்சில் 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிகு அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. நிரந்தரமற்ற உறுப்பு நாட்டின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, லக்சம்பர்க், தென்கொரியா, ருவாண்டா ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் முடிகிறது.இதையடுத்து அந்த 5 இடங்களுக்கு புதிய உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையில் நடந்தது.

இதில் அங்கோலா, மலேசியா, வெனிசுலா ஆகிய 3 நாடுகளுக்கு போட்டியே இல்லை. இந்த நாடுகள் முறையே 190, 187, 181 ஓட்டுகள் பெற்று, நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக தேர்வு பெற்றன.
மேற்கு ஐரோப்பியா மற்றும் பிற குழுவுக்கான 2 உறுப்பினர் பதவிக்கு பலத்த போட்டி நிலவியது. குறிப்பாக நியூசிலாந்து, ஸ்பெயின், துருக்கி ஆகிய நாடுகள் கடும் போட்டியில் ஈடுபட்டன. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் 129 ஓட்டுகளை கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். இறுதியில் நியூசிலாந்து முதல் சுற்றிலேயே 145 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றது. மீதி ஒரு இடத்துக்கு ஸ்பெயினுக்கும், துருக்கிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. மூன்றாவது சுற்றில் ஸ்பெயின் 132 ஓட்டுகளை பெற்று, தேர்வு பெற்றது.

புதிய உறுப்பு நாடுகளான அங்கோலா, மலேசியா, நியூசிலாந்து, வெனிசூலா, ஸ்பெயின் ஆகியவற்றின் பதவிக்காலம் ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு சாட், சிலி, ஜோர்டான், லிதுவேனியா, நைஜீரியா ஆகிய 5 நாடுகளின் பதவிக்காலம் முடிகிறது. எனவே அடுத்த ஆண்டு இந்த 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி