அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…

வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!…

வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்த ஆசாமி கைது!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அமைந்திருந்த 110 மாடி இரட்டை கோபுரம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது சர்வதேச தீவிரவாதி பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி விமானங்களை மோதி உலகையே பதற்றத்தில் ஆழ்த்தினர். 3 ஆயிரம் போர் கொன்று குவிக்கப்பட்ட இந்த நிகழ்வின், 13–வது நினைவு நாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டெலிவிஷனில் தோன்றி பேசினார். அப்போது அவர் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை நிர்மூலம் ஆக்குவேன் என சூளுரைத்தார்.இதற்கு மத்தியில், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட வெள்ளை மாளிகையின் வடக்கு வேலியை தாண்டி ஒரு மர்ம ஆசாமி குதித்து விட்டார். அந்த ஆசாமி ஜப்பான் கார்ட்டூன் பாத்திரமான ‘போகிமோன்’ தொப்பியைப் போன்றதொரு மஞ்சள்நிற தொப்பி அணிந்திருந்தார்.வெள்ளை மாளிகை தோட்டத்தில் புகுந்து ஓடிய அவரைக் கண்டவுடன் உளவு அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டனர். துப்பாக்கியைக் காட்டி அந்த ஆசாமியை கீழே விழுமாறு கூறினர்.

ஆனால் உளவு அதிகாரிகள் பல முறை கூறியும் அந்த ஆசாமி அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. அடிபணியவும் இல்லை. ஒரு கட்டத்தில் கோபமுற்ற உளவு அதிகாரிகள், அந்த ஆசாமியை கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல கீழே தள்ளி அமுக்கினர். அவரிடம் சோதனையும் நடத்தினர். அதன்பின்னர் அவரை கைது செய்து விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர். அவரது பெயர்கூட இன்னும் வெளியிடப்படவில்லை.இது தொடர்பாக உளவுத்துறை செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ஒரு தனி நபர், வெள்ளை மாளிகையின் வடக்கு வேலியைத் தாண்டி உள்ளே குதித்து விட்டார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். அவர் யு.எஸ்.எஸ்.எஸ். சீருடை பணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார்’’ என கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமா இல்லை. அவர் அமெரிக்க தாக்குதல் நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளியே சென்றிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக வெள்ளை மாளிகை கதவுகள் அடைக்கப்பட்டன. யாரும் உள்ளே வரவோ, உள்ளே இருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்க தாக்குதல் நினைவு நாளில், வெள்ளை மாளிகையில் ஒரு ஆசாமி அத்துமீறி நுழைந்து கைதாகி இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி