செய்திகள்,திரையுலகம் மைதிலி (2014) திரை விமர்சனம்…

மைதிலி (2014) திரை விமர்சனம்…

மைதிலி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நவ்தீப் இயக்குனராக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார். இந்நிலையில் பாண்டு நடத்தும் மியூசிக் டி.வி. சேனலில் மியூசிக் ஆல்பம் இயக்கும் இயக்குனராக வேலையில் சேருகிறார். அந்த மியூசிக் ஆல்பத்தை தனக்கு பி.ஏ.வாக இருக்கும் பெண்ணை வைத்துதான் எடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் பாண்டு. முதலில் மறுக்கும் நவ்தீப் பிறகு தன் நண்பர்களின் ஆலோசனைப்படி அதற்கு சம்மதம் தெரிவித்து மியூசிக் ஆல்பம் எடுப்பதற்கு லொகேஷன்களை நண்பர்களுடன் தேடுகிறார்.

அப்படி லொகேஷன்கள் தேடும் போது ஒரு பங்களாவை பார்க்கிறார்கள். அங்கு வாட்ச்மேன் மட்டுமே இருப்பதால் அவரிடம் அனுமதி வாங்கி மியூசிக் ஆல்பம் எடுக்க தயாராகுகிறார்கள். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கும் போது பாண்டுவின் பி.ஏ., நடிக்க தெரியாமல், செய்யும் வேலையை சொதப்பல் செய்வதால் கடுப்பாகிறார் நவ்தீப். இந்நிலையில் அமெரிக்காவில் மாடலாக இருந்தவரும், அந்த பங்களாவின் உரிமையாளரான சதா வருகிறார். அவரைப் பார்த்ததும் உற்சாகமாகிறார் நவ்தீப்.சதாவை தான் எடுக்கும் மியூசிக் ஆல்பத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுகிறார் நவ்தீப். அன்று இரவு சதா போனில் தோழியிடம் பேசும்போது அலங்கார விளக்கு சதா மேல் விழுகிறது. இதனால் சோகமாகும் சதாவை சமாதானம் செய்கிறார் நவ்தீப். இதிலிருந்து இவர்கள் நண்பர்களாக பழக ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை பயன்படுத்தி தான் எடுக்கும் மியூசிக் ஆல்பத்தில் நடிக்க வைக்கிறார்.

அதன்பிறகு இரவு நேரத்தில் அந்த வீட்டில் ஒரு வெளிச்சம் செல்வது போல் பார்க்கிறார் நவ்தீப். மேலும் சதா அறையில் தூங்கும் போதும் குளிக்கும் போதும் ஒரு மர்ம சத்தம் வருவதையும் யாரோ ஒருவர் பின்தொடர்வது போன்றும் அறிகிறார். பின்னர், வீட்டில் வித்தியாசமான கோலத்தை காண்கிறார். அதன்பின்னர் வீட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை அறிகிறார் நவ்தீப்.இறுதியில் வீட்டில் உள்ள மர்மத்தை நவ்தீப் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் நவ்தீப், தீபக் என்னும் இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனருக்குண்டான கோபம், வீட்டில் உள்ள மர்மத்தை கண்டறியும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். மைதிலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதா, நடனம், நடிப்பு, கவர்ச்சி என்று மனதை கவர்கிறார். பாண்டு, வாட்ச்மேன் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் வாட்ச்மேன் பார்க்கும் பார்வையிலேயே பயமுறுத்துகிறார்.

விகாஸ் முருகன் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரள வைக்கிறார். செல்வக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ஒரு பங்களாவை மையப்படுத்தி கதை அமைத்துள்ள இயக்குனர் சூர்யராஜன், அதை திகிலாக கொடுக்க நினைத்து சற்று தடுமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதியில் காட்சிகள் நீண்டுகொண்டே செல்கிறது. இசை மட்டுமே படத்திற்கு பக்கபலமாக இருந்து கதையை நகர்த்தி செல்கிறது. கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தாலும் கிளைமாக்சில் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மைதிலி’ பயம்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி