செய்திகள்,திரையுலகம் திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…

திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்…

திருடு போகாத மனசு (2014) திரை விமர்சனம்… post thumbnail image
செந்தில் கணேஷ் கிராமிய பாடல்கள் பாடும் மேடை கலைஞன். புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் இவர் அந்த சுற்றுவட்டாரத்திலேயே மிகப்பிரபலம்.இவர் சினிமாவில் பெரிய பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், இவரோடு மேடையில் ஆடி, பாடும் விமலா என்ற பெண் இவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், தனது லட்சியத்துக்காக அவளுடைய காதலை இவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

ஒருநாள் நாயகனுக்கு இயக்குனர் செல்ல தங்கையாவின் படத்தில் பாடக்கூடிய வாய்ப்பு வருகிறது. அதற்காக சென்னைக்கு சென்று இயக்குனர் செல்ல தங்கையாவை சந்திக்கிறார். அங்கு இயக்குனரிடம் தனது நடிப்பு ஆசையையும் கூறும் நாயகனிடம், இயக்குனர் வெளிஉலகத்தில் 3 மாத காலம் பைத்தியமாக நடித்தால் உனக்கு நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறுகிறார். நடிப்பு ஆசை துளிர்விட நாயகனும் பைத்தியமாக நடிக்கிறார்.இதற்கிடையில், தாய், தந்தை இழந்து, ஹாஸ்டலில் தங்கி மருத்துவப்படிப்பு படித்து வரும் நாயகி சாய் ஐஸ்வர்யா, பைத்தியமான ஒருவரை குணமாக்கி, அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறாள். ஒருநாள் தொலைக்காட்சியில் நாயகனின் பாடலை கேட்கிறாள். அதைப்பார்த்ததும் நாயகன் மீது இவளுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. அவன் பைத்தியமாக இருக்கிறான் என்று தெரிந்ததும், அவனை குணமாக்கி, அவனையே திருமணம் செய்துகொள்வேன் என்ற லட்சியத்தோடு அவன் ஊருக்கு போகிறாள்.

அங்கு சென்று அவன் வீட்டிலேயே தங்கி, அவனுக்குண்டான பணிவிடைகளை செய்து வருகிறாள். இதற்கிடையில் நாயகனுக்கும் அவள் மீது காதல் வந்துவிடுகிறது. 3 மாதம் காலம் முடிவடைந்த பிறகு இயக்குனரை சந்திக்க நாயகன், நாயகியுடன் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறான். அங்கு போனவுடன் இயக்குனர் சும்மாதான் உன்னை அவ்வாறு நடிக்கச் சொன்னேன். உன்னை என்னுடைய படத்தில் நடிக்கவைக்க முடியாது என்று சொல்கிறார். இதனால், மனவேதனையுடன் திரும்புகிறார் நாயகன்.
இருந்தாலும் எப்படியாவது நடிகனாகிவிட்டுத்தான் ஊருக்கு திரும்புவேன் என்று சென்னையிலேயே தங்க முடிவெடுக்கிறார் நாயகன். நாயகி தோழியின் மாமா வீட்டில் இருவரும் தங்கி, நடிக்க வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்குகிறார்கள். ஒருகட்டத்தில், இயக்குனர் செல்ல தங்கையா படத்திலேயே நடிக்க வாய்ப்பு வருகிறது நாயகனுக்கு. அந்த படத்தில் நடித்து பெரிய நடிகராகிறார் நாயகன்.

பின்னர் சொந்த ஊருக்கும் திரும்பும் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க நாயகனின் பெற்றோர் முடிவெடுக்கின்றனர். அதன்படி, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக, நாயகனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அதில், இயக்குனர் 3 மாதம் காலம் நாயகன் பைத்தியமாக நடித்ததை போட்டு உடைத்து விடுகிறார். இதை கேட்கும் நாயகி தனது லட்சியத்தை நாயகன் கெடுத்துவிட்டார் எனகூறி அங்கிருந்து வெளியேறி, நாயகனை பிரிகிறார்.அதன்பின்னர், நாயகன் என்னவானார்? இவர்களது திருமணம் நடந்ததா? நாயகியின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.நாயகன் செந்தில் கணேஷ் கிராமிய பாடல் கலைஞனாக, கிராமத்து இளைஞனாக பளிச்சிடுகிறார். இவருடைய நடிப்பு மட்டும்தான் படத்தில் பேசும்படியாக இருக்கிறது. பைத்தியம் பிடித்தவனைப்போல் நடிக்கும் இவருடைய நடிப்பு ஓகே. இவரே படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பாடியிருப்பதால், படத்தில் அதற்கேற்றார்போல் உதடு அசைவையும், உடல் மொழியையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.

நாயகி சாய் ஐஸ்வர்யா பொம்மையை போல் வந்து போகிறார். படத்தில் சீரியசான காட்சியிலும், காமெடியான காட்சியிலும் ஒரே மாதிரியான முகபாவணையை காட்டியுள்ளார். நாயகனுடைய நண்பர்கள், ஊர் பெரியவர்கள், நாயகியின் தோழிகள், நாயகன், நாயகியின் பெற்றோர் என படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே மிகையான நடிப்பையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். படத்தில் இயக்குனராகவே வரும் இயக்குனர் செல்ல தங்கையாவுக்கும் நடிப்பு சுத்தமாக வரவில்லை. வசனங்கள் தெளிவாக இருந்தாலும், அதை உச்சரிக்கும் விதம் எரிச்சலை வரவழைக்கிறது.இயக்குனர் செல்ல தங்கையா டி.ராஜேந்தரின் ரசிகராக இருப்பார்போலும். அவருடைய தாக்கம் இந்த படத்தில் ஏகப்பட்ட இடத்தில் வருகிறது. படத்தில் சிறுபிள்ளை முதற்கொண்டு பஞ்ச் டயலாக் பேசுகிறது. அதேபோல், காதலை பற்றி இவர்கூறும் விளக்கம் சூப்பர். படத்தின் கதை, வசனம், திரைக்கதை, பாடல்கள், இசை முதற்கொண்டு எல்லா பணியையும் இவரே மேற்கொண்டு இருக்கிறார். இவருடைய இசையில் அனைத்துப் பாடல்களிலும் பழைய பாடல்களின் தாக்கம் இருக்கிறது. இருந்தாலும் கேட்க தூண்டுகிறது. குறிப்பாக, மேடையில் நாயகன் ஆடிப்பாடும் இரண்டு நாட்டுப்புறப் பாடல்களும் ஆட்டம் போட வைக்கின்றன. படத்திற்கு இதுதான் பலம் கூட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘திருடு போகாத மனசு’ பரவாயில்லை……..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி