செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் ‘ஜில்லா’வில் அடி வாங்கிய விஜய்(விமர்சனம்)…

‘ஜில்லா’வில் அடி வாங்கிய விஜய்(விமர்சனம்)…

‘ஜில்லா’வில் அடி வாங்கிய விஜய்(விமர்சனம்)… post thumbnail image
தாதா மோகன்லாலில் அடியாளின் மகன் விஜய். தனக்காக உயிரைக் கொடுத்த அடியாளின் பிள்ளையை தன் பிள்ளையாகவே வளர்க்கிறார். மோகன்லாலை யார் எதிர்த்தாலும் காலி பண்ணும் பாசக்காரப்பிள்ளையாக உருவெடுக்கிறார் விஜய். தனது தாதாயிசம் பிரச்சினையின்றித் தொடர, போலீஸில் நம் ஆள் இருவன் இருந்தால் நல்லதே என்று மோகன்லால் விஜய்யை போலீஸ் ஆக்குகிறார். போலீஸ் ஆன பிறகே, அப்பாவின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவது விஜய்க்கு புரிகிறது. எனவே நல்ல போலீஸாக மனம் திருந்தி, மோகன்லாலையும் திருத்திக்காட்டுவேன் என்று சவால் விடுகிறார். ஜெயித்தாரா என்பதே படம்.

விஜய் அறிமுகம் ஆகும் ஓப்பனிங் சீன், செம மாஸ். தியேட்டரே அதிர்கிறது. படத்திற்குப் படம் மனிதருக்கு வயது குறைந்துகொண்டே போகிறது. ஜாலியான ஆளாகவும், ஆக்ரோசமான ஆளாகவும் ஒரே நேரத்தில் ஸ்கோர் பண்ணுகிறார். ஆனால் சீரியஸான காட்சிகளில்கூட அவர் கொடுக்கும் சில எக்ஸ்பிரசன்கள், வசனம் பேசும் ஸ்டைல் எரிச்சலை உண்டுபண்ணுகிறது. ஆனால் சண்டைக்காட்சிகளிலும், பாடல்காட்சிகளிலும், காமெடியிலும் மனிதர் கலக்குகிறார். மோகன்லாலுக்கு மரியாதை கொடுத்து, அவர் பெயரை முதலில் போட்டதற்கே விஜய்யைப் பாராட்டலாம்.

காஜல் காக்கி ட்ரெஸ்ஸிலேயே வருவதாலோ என்னவோ, கொஞ்சம் டல்லாகத் தெரிகிறார். ஆனால் பாடல் காட்சிகளில் ஃப்ரெஷ்ஷாக வருகிறார். பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், காமெடிக்காட்சியிலும் கலக்குகிறார். சூரியை சுடும் காட்சி நல்ல காமெடி. இவர் உசரமா இருக்காருங்கறது வாஸ்தவம் தான்..அதுக்காக தொப்புள்ல இருந்து 2 சாண் கீழே சேலை கட்டுறது தான் ஓவரா இருக்கு..எப்போ என்ன ஆகுமோன்னு நமக்கு பக்கு பக்குங்குது. அது பக்கா..ஜிவ்வா?..என்னமோ!

படத்தின் முதல்பாதி ஆக்சன்,ஜாலி என விறுவிறுப்பாகவே போகிறது. தன் அப்பாவைக் கொன்னது போலீஸ் என்பதால், விஜய்க்கு போலீஸ் என்றாலே பிடிப்பதில்லை. அதைவைத்து அவர் அடிக்கும் லூட்டிகள் அட்டகாசம். காஜலைப் பார்த்தவுடனேயே காதலில் விழுகிறார். பெண் கேட்டு அடியாள் பட்டாளத்துடன் போகும்போது தான் தெரிகிறது அவரும் போலீஸ் என. அந்த காட்சியும், அதைத் தொடரும் காஜல்+சூரி காட்சிகளும் செம ஜாலி. இன்னொரு பக்கம், பாசக்காரப்பிள்ளையாக விஜய், மோகன்லாலில் கட்டளைகளை அடிதடி-அதிரடியாக நிறைவேற்ற, ஆக்சனுக்கும் பஞ்சமில்லை.படத்தின் நீளம் அதிகம். விஜய் போலீஸ் ஆகி மனம் திருந்தி மோகன்லாலிடம் சவால் விடும்போது இண்டர்வெல். அதற்கே ஒன்றரை மணிநேரம் ஆகிவிடுகிறது. அதன்பிறகு மோகன்லாலுக்கும் விஜய்க்கும் நடக்கும்
பாசப்போராட்டம் அடுத்து ஒரு மணிநேரம் போகிறது. மோகன்லால் திருந்த தடையாக இருப்பது அவரது ஈகோ தான். அதை அவரது வளர்ப்புப்பிள்ளை எப்படி மாற்றுகிறார் என்று படத்தை முடித்திருந்தாலே, நல்ல படமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் இரண்டரை மணிநேரம் படம் ஓடியபின், கூடவே இருந்த சம்பத் வில்லன் என்று தெரிகிறது. பிறகு சம்பத்திடம் இருந்து மோகன்லால் குடும்பத்தைக் காப்பாற்ற விஜய் போராடுவது, அதில் தம்பியை இழப்பது, அந்த பழி விஜய் மீதே விழுவது என்று வழக்கமான விஜய் மசாலாவிற்குள் கடைசி அரைமணி நேர படம் சிக்கிவிடுகிறது. இழுவையான காட்சிகள் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன.

படத்தின் தரத்தை உயர்த்துவதே மோகன்லாலில் பிரசன்ஸ் தான். அட்டகாசமான நடிப்பு. ஆரம்பத்தில் காட்டும் கம்பீரமாகட்டும், பிள்ளையே எதிர்ப்பதை நினைத்து கலங்குவதாகட்டும் அருமையாக நடித்திருக்கிறார். பாதிப்படத்திலேயே சோலியை முடித்துவிடுவார்களோ என்று நினைத்தால், இறுதிவரை வருகின்ற முக்கியமான கேரக்டர். இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். இதை எல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மாஸ் ஹீரோவுக்கே உரிய ஆக்சன் காட்சி,காமெடி,காதல் என ஜாலியான படம் என்றே சொல்லலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி