அரசியல்,முதன்மை செய்திகள் ஆப்பு வைக்கும் இங்கிலாந்து…எஸ்கேப் ஆகும் இலங்கை பாதுகாப்பு ஆலோசகர்

ஆப்பு வைக்கும் இங்கிலாந்து…எஸ்கேப் ஆகும் இலங்கை பாதுகாப்பு ஆலோசகர்

Prasanna Silva Srilanka Warcrime

ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவ மேஜராக இருந்தவர் பிரசன்ன சில்வா. இவர் மீது அப்பாவித் தமிழர்களைக் கொன்றதாக தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உலகத் தமிழர் பேரவை இங்கிலாந்து அரசிடம் மனு கொடுத்துள்ளது.

பல அப்பாவித் தமிழர்களின் உயிரைப் பறித்த போர்க்குற்றவாளியான சில்வாவிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இதையடுத்து அவரைப் பிடித்து இங்கிலாந்து அரசு விசாரிக்கலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் பீதியடைந்துள்ள சில்வா இங்கிலாந்திலிருந்து தப்பி ஓடத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55வது டிவிசனுக்கும், 59வது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்குற்றம் இழைத்த இவர் மீது பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, லண்டனின் குடும்பத்தினருடன் தங்கியுள்ள போதும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிராக – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கிக்கு எதிராக உலகத் தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது.

அத்துடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு ஒன்று ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈஸ்டர் காலம் என்பதால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இரண்டு வாரங்களாகும் என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பிரித்தானியாவில் தாம் விசாரிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தினால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி