செய்திகள்,முதன்மை செய்திகள் மது இல்லாமல் மனித வரலாறு இல்லை

மது இல்லாமல் மனித வரலாறு இல்லை

மது இல்லாமல் மனித வரலாறு இல்லை post thumbnail image


தமிழ் நாட்டில் அரசாங்கமே ஒயின்  ஷாப் நடத்துவதால்,   கடந்த  20  வருடங்களாக பயமில்லாமல்  குடித்துப் பழகிய தமிழனுக்கு, கடந்த ஒரு மாதத்துக்கும்  மேலாக குடிக்காமல் இருப்பது பெரும்  தண்டனை  காலமாக இருக்கிறது போலும் ?
விளைவு…
கைகால் நடுங்க ஆரம்பித்து,  ஆளாளுக்கு வீட்டிலேயே  சாராயம்  காய்ச்சுவதுஎப்படி ? ஒயின்  தயாரிப்பது  எப்படி? என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர்.  சிலர்  அடுப்பில் குக்கர் வைத்து காய்ச்சவும் தொடங்கி விட்டனர்.    எத்தனை விசில் அடித்தப்பின் இறக்க வேண்டும்,  என்றுயூடூபில் கேட்கும்  நிலைக்கு,   நிலமை  சீரியஸாய் போய் விட்டதுதான் காமெடி!
உண்மையில்….  தடுமாறாமல் நாம் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்த்தோமானால் ஒரு உண்மை  புலப்படும்.    ‘மதுவை தவிர்த்து, மனித வரலாற்றை அறிய முடியாது’ என்பதுதான் அது. ‘Civilisation begins with distillation’  என்கின்றார்நோபல் எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர்.
இந்த  உலகத்தில் மனிதன் எந்த மூலையில் எந்த  சூழ்நிலையில்  வாழ்ந்தாலும் சரி,  இருந்தாலும்  சரி, தனக்கான போதை பொருளை தானே தயாரித்துக்  கொள்ளக் கூடிய  ஆற்றல்  அவனுக்கு இயற்கையாகவே இருக்கிறது.  அந்த சூழலில்இயற்கையாக என்ன பொருள் கிடைக்கிறதோ  அதை வைத்து  சுயமாக போதை தரக் கூடியமது பானத்தை தயாரித்துக் கொள்கிறான். மனித குல வரலாற்றில் இது தொன்றுதொட்டு நடந்து வருகிறது.
அரிசியிலிருந்து   ஓட்கா,முந்திரிப் பழத்திலிருந்து ஃபென்னி,திராட்சையிலிருந்து ஒயின்,ஆப்பிள், ஆப்ரிகாட், பீச், திராட்சை  போன்ற பழங்களிலிருந்து  பிராந்தி,பார்லியிலிருந்து பீர்,பழைய சோற்றிலிருந்து சுண்டக்கஞ்சி,பார்லி, கோதுமை,  கம்பு, சோளம்  போன்ற தானியங்களிலிருந்து விஸ்கிபதப்படுத்தப்பட்ட  கரும்பு கூழிலிருந்து ரம்பல நாள் ஊறவைத்த பழங்கள், வெல்லம், மரப்பட்டைகள் கொண்டு சாராயம்,தென்னை, பனை, ஈச்சை மரத்திலிருந்து  கள், என்று மனிதன், விதவிதமான மதுபானங்களை தயாரித்து பயன்படுத்தி வருகின்றான்.
பழங்களையும்  தானியங்களையும் பல நாட்களுக்கு  ஊற வைத்தும், நொதிக்க வைத்தும், கொதிக்க வைத்தும்,  பின்னர்  வடிகட்டியும்  போதை தரும் மதுபானங்களை உற்பத்தி  செய்கிறார்கள்.  ‘நாகரீகமும் வடித்தலும்’ ஒன்றோடொன்று  இணைந்தது என்கிறார் ஆதம்  ரோஜர்.
நாடோடியாக அலைந்த மனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பயனாகநிலையாக ஒரு இடத்தில் வாழக் கற்றுக் கொண்டான். அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊற விட்ட போது அது புளித்தது. புளித்ததை முகர்ந்ததும் தலை கிறுகிறுத்தது. புளித்ததை கொதிக்க வைத்து குடித்ததும் போதை உச்சிக்கு  ஏறியது.   உலகின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகள் ஏதேச்சையாக தோன்றியது தான். போதை தரும் பானத்தையும் அப்படித்தான் கண்டுபிடித்தான். இப்படிதான் முதன் முதலில் பீர் கண்டுபிடிக்கப்பட்டது.
விஞ்ஞானிகள், தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கண்டுபிடிப்புகளில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட களி மண் எம்பொராக்களில் ஒயின்களின் மிச்சத்தை கண்டனர். சிரியா, மொசபோட்டோமியா,எகிப்து போன்ற நாடுகளில் நொதித்தல் வடிகட்டுதல் போன்றவை அறியப்பட்டன.  உலகின் பல கண்டு பிடிப்புகளுக்கு பாதை வகுத்த, எகிப்தில்தான்முதன்முதலில் மத சடங்குகளில் ஒயின் பயன்படுத்தப்பட்டது என்கின்றது வரலாறு.  ———————–
அமெரிக்காவில் மக்களே தங்களுக்கு தேயையான பீர் மதுபானத்தை சுயமாக தயாரித்துக் கொள்ள முடியும். அதற்கான உபகரணங்கள் அங்காடிகளில்விற்கப்படுகின்றன. பீர் தயாரிக்க தேவையான மூல பொருட்களும் அங்காடிகளில் கிடைக்கின்றன. விருப்பமுடையவர்கள் தங்களது வீடுகளிலேயே பீரை தயாரித்து (ஹோம் மேட் பீர்) பயன்படுத்துகின்றனர்.
இன்றும்  கூட சவுதி அரேபியா,  கத்தார், குவைத்  போன்ற நாடுகளில் வசிக்கும் அயலக  தொழிலாளர்கள்  தங்களுக்கு  தேவையான  மது பானங்களை குக்கரில் வைத்து தயாரிக்கின்றனர்.  அதை பாட்டில்கள் அல்லது சிறு பாக்கெட்டுகளில்அடைத்து தங்களது  நெருங்கிய வட்டங்களில்  விற்கவும்  செய்கின்றனர். கடுமையான  சட்ட திட்டங்கள்  கொண்ட அரபு நாடுகளிலேயே இப்படி என்றால் பிற நாடுகளில் கேட்கவும்  வேண்டுமோ….?  இப்படி… மனிதன் சுயமாக  சிந்திக்க தொடங்கிய காலத்திலிருந்தே, தனக்கான   மது வகைகளை  தயாரிக்க தொடங்கி விட்டான்.
———–
பழந்தமிழர்கள் மதுபானங்கள் தயாரிப்பில் வளமான அறிவைக் கொண்டு இருந்தனர்.அன்றைய நாட்களில் மதுபானங்கள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள்,தென்னை. பனை மற்றும் ஈச்சை  போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில்தயாரிக்கப்பட்டன. 
மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர்களில் மதுபானங்கள் அழைக்கப்பட்டன.  அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள்.குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்தசெய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம்.
வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவுவெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி  மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.
மலைத் தேனை காட்டு மூங்கில் குடுவைகளில் அடைத்து அவற்றை நாட்பட நாட்படமுதிர்விப்பார்கள். இவ்வாறு பதப்படுத்திய தேனே மென்போதை மிகுந்த ‘தேக்கல் தேறல்’ எனப்படும். குறவர்கள் இந்தத் தேறலைப் பருகி குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம்.  இந்தத் தேறல் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.
பழந்தமிழர்கள் ‘நறும்பிழி’ என்ற மதுபானத்தை அருந்தினார்கள். உச்சபச்ச போதை தரும் இந்த நறும்பிழிக்கு நல்லதொரு சைட்டிஷ் நாட்டு மீன்குழம்புதான். தேனில் ஊறிய பலாச்சுளைப் போல கெட்டியான மீன் குழம்பில் மிதக்கும் கொழுத்த மீன் துண்டங்களும், மண் குவளைகளில் ஊற்றியநறும்பிழியும் அன்றைய பார்ட்டிகளில் களைகட்டும் என்கின்றது பெரும்பாணாற்றுப் படை. 
ஊறவைத்த அரிசியை உருளைகளில் வாயகன்றபாத்திரங்களிலிட்டு காய வைப்பார்கள். பின்னர் இரவும் பகலும் இரு வேளைகளிலும் நறுமணம் கமழும் பலவகைப் இலைகளை அதில் சேர்ப்பார்கள்.  தீப்போல் ஒளிரும் தாதிரிப்பூவையும், வெல்லத்தையும் கூடவே சேர்ப்பார்கள்.இவற்றை இரு வேளையும் வெறும் கைகளால் நன்றாக கிளறிவிட வேண்டும். பிறகுவாய்மூடி கட்டின மண் குடங்களில் நீண்ட காலத்திற்கு ஊற வைப்பார்கள்.நொதித்து பக்குவமாகும் போது கொதி நீரில் வேகவைத்து பின்னர் பனை நாறிலானவடிகட்டிகளில் வடித்து வைப்பார்கள்.  சமீபத்தில் மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்ற, மலையாளத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ‘நிலம் பூத்த மலர்ந்த நாள்’ நாவலில்தான் மேற்கண்ட ‘நறும்பிழி’ தயாரிக்கும் செய்முறை அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது.
அன்றைய சங்ககால மது தயாரிப்பிற்கும் பிற்காலத்தில் சித்தர்கள் தயாரித்தபட்டைசாராயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டுமே ஒன்று போல் அதேபோன்றே சூத்திரத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 
அன்றைய நாட்களில் உடலுக்கு நன்மைத் தரும் பொருட்களைக் கொண்டு மதுபானங்கள் தயாரித்தனர், குடித்துக் களித்தனர், ஆடி மகிழந்தனர். இயற்கையாக என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு ஊறவைத்தும்,  நொதிக்கவைத்தும் புளிக்கவைத்தும் இயற்கையாகமதுபானங்களைத் தயாரித்தனர்.
இன்றையை நாட்களில் மதுபானங்கள் தயாரிக்கும் அவல முறையை சொல்லி மாளாது.அதுவும்  அரசே டாஸ்மாக் மூலம் அயல் நாட்டு மதுபானங்கள் விற்கத் தொடங்கியபின்னர், நிலைமை முன்பைவிட சீர் சீர்கெட்டுவிட்டது எனலாம். அயல் நாட்டு மதுவகைகளைப் பயன்படுத்துவதில்; தனியாரிடம் இருந்த போது குடி மீதான பயம், அரசே மதுபான விற்பனையை ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் சுத்தமாய் இல்லாமல் போய்விட்டது. விளைவு….குடி நோயாளிகள் பெருத்த மாநிலமாக தமிழகம் தற்போது மாறிக்கொண்டு இருக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் இன்று பெருவாரியான மக்கள் குடிக்கும் மதுபானங்கள்; விலையைவைத்தே அடையாளம்சொல்லப்படுகிறது. இதிலிருந்தே இன்றைய மதுபானங்கள் எத்தகைய தரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
இவர்களின் அயல் நாட்டு மதுபானங்கள் விற்க வேண்டும் என்பதற்காக, இதுகாறும்  தமிழர்கள் தொன்று தொட்டு குடித்து வந்த கள்ளையே கடந்த இருபது வருடங்களாக வடிக்கக் கூடாது  விற்பனை  செய்யக் கூடாது  என்று தடைபோட்டுவிட்டார்கள், கிராதகர்கள். 
ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை போன்ற   அண்டை  மாநிலங்களில் இன்றும் கள் இறக்கவும் விற்பனை  செய்யவும்  அனுமதி  இருக்கிறது.  கெமிக்கல்கள்    மூலம் தயாரிக்கப்படும் பீர் பிராந்தி விஸ்கியைவிடவா,  இயற்கையான  முறையில் வடிக்கப்படும் கள் கெடுதலாகிவிட்டது ?
இனிவரும் காலங்களிலாவது தமிழர்களின் தொல்கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில்,  உடல் அரோக்கியப் பானமான ‘கள்’ இறக்கஅரசு அனுமதிக்க வேண்டும்.  செய்வார்களா….?

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Tags: