அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் 8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு..

8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு..

8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு.. post thumbnail image
செய்யாறு: 8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை திரும்பி போகுமாறு செய்யார் அருகே கழுத்தை பிளேடால் அறுத்து பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு அந்த வழியில் உள்ள நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சில இடங்களில் சாலைக்காக விவசாய நிலங்கள் அளவிடும் பணி நடைபெற்று கற்களை நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மக்கள் போராட்டம்

இப்பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலங்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் என்பதால் அவற்றை கொடுக்க இயலாது என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு விவசாயிகள், தமிழக அரசியல் கட்சிகள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விரட்டியடித்த மக்கள்

எனினும் அரசு செவிசாய்க்காமல் அந்த திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் கலசப்பாக்கத்தில் உள்ள சாலையனூர் கிராமத்தில் நிலம் அளவிடும் பணி செய்ய அதிகாரிகள் வந்தனர். அவர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

வட்டாட்சியருடன் வாக்குவாதம்

அதேபோல் செய்யாறு அருகே கீழ் கொளத்தூரில் நிலம் அளக்க வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் நிலம் அளவீடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.

திரண்ட விவசாயிகள்

இந்நிலையில் செய்யாறில் உள்ள எருமைவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நிலத்தில் கற்கள் நடும் பணிகள் நடைபெற்றன. இதையறிந்து அங்கு விவசாயிகள் ஒன்று கூடினர். அப்போது அந்த நில உரிமையாளரின் மகள் கழுத்தில் பிளேடை வைத்துக் கொண்டு கற்களை அகற்றிவிட்டு அதிகாரிகளை செல்லுமாறு கூறினார்.

தற்கொலை தான் தீர்வா

ஆனால் அவர்கள் கல்லை எடுக்க மறுத்துவிட்டனர். மேலும் அப்பெண்ணிடம் இருந்து பிளேடை பறிக்க போலீஸார் முற்பட்டனர். அப்போது உயிர் மீது அக்கறை இல்லை என்றும் விவசாயம்தான் முக்கியம் என்றும் கூறிய அந்த பெண் சற்றும் எதிர்பாராதவிதமாக கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து ரத்தம் கொட்டியதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி