செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…

ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்…

ஐ.பி.எல்.சீசனில் அணிகள் தக்க வைத்த வீரர்கள்… post thumbnail image
புதுடெல்லி:-7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12–ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13–தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் ஒவ்வொரு அணிகளும் முந்தைய சீசனில் விளையாடிய வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 5 வீரர்களை தொடர்ந்து தங்கள் அணிகளில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அப்படி தக்கவைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி, ரூ.5.5 கோடி, ரூ.4 கோடி வீதம் சம்பளமாக ஒதுக்க வேண்டும் என்றும், சர்வதேச போட்டியில் ஆடாத வீரர் தக்க வைக்கப்பட்டால் அவருக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பட்டியலை சமர்ப்பிக்க ஜனவரி 10–ந்தேதி (நேற்று) கடைசி நாளாகும். இதன்படி 8 அணி நிர்வாகங்களும் அந்த விவரங்களை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.

சென்னை:-
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணி என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்சில் எதிர்பார்த்தது போலவே கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஆல்–ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ ஆகிய 5 பேர் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ‘டுவிட்டர்’ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:-
ஓய்வு பெற்று விட்ட சச்சின் தெண்டுல்கர் இல்லாமல் முதல் முறையாக களம் இறங்க உள்ள நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, யார்க்கர் மன்னன் மலிங்கா, ஹர்பஜன்சிங், ஆல்–ரவுண்டர் கீரன் பொல்லார்ட், அம்பத்தி ராயுடு ஆகியோர் தக்க வைக்கப்பட்டிருப்பதாக அந்த அணியின் உரிமையாளர் நிதா அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:-
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய கேப்டன் ஷேன் வாட்சன், ரஹானே, ஜேம்ஸ் பவுல்க்னெர், ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடருகிறார்கள். இவர்களில் சாம்சன் 19 வயதே நிரம்பியவர் ஆவர்.இதுவரை சர்வதேச போட்டிகளில் எதுவும் ஆடாத கேரளாவைச் சேர்ந்த சாம்சன் சமீபத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து கலக்கினார். அடுத்த மாதம் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் சாம்சன் உள்ளார்.

பஞ்சாப் அணி:-
கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணி இரண்டு பேரை மட்டுமே வைத்துக் கொண்டுள்ளது. இதில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின் போது மின்னல் வேகத்தில் சதம் அடித்து மிரள வைத்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரின் பெயர் கணித்தது போலவே இடம் பெற்றுள்ளது.
ஆனால் ஆச்சரியப்படும் வகையில் அதிக பிரபலமில்லாத உள்ளூர் பேட்ஸ்மேன் 20 வயதான மனன் வோராவையும் தக்க வைத்திருக்கிறது. வோரா சமீபத்தில் ரஞ்சி கிரிக்கெட்டில் ஜார்கண்டுக்கு எதிராக 187 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்:-
ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான், உலகின் அபாயகரமான பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் ஆகிய இருவரை மட்டும் தொடர்ந்து அணியில் வைப்பது என்று முடிவு செய்துள்ளது.

டெல்லி அணி:-

டெல்லி டேர்டெவில்ஸ் அணி அதிரடியாக, எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளது. அந்த அணியின் உள்ளூர் நாயகன் 35 வயதான ஷேவாக் பார்மில் இல்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் 13 இன்னிங்சில் விளையாடி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஓராண்டுக்கு மேலாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருவதால் அவரை வைத்துக் கொள்ள டெல்லி அணிக்கு விருப்பம் இல்லை. இதனால் தங்கள் அணியில் இருந்து அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்து விட்டு, இந்த சீசனில் புத்தம் புதிய அணியை தேர்வு செய்யும் முடிவுக்கு டெல்லி அணி வந்துள்ளது.

பெங்களூர்:-

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் என மூவர் உள்ளனர்.

கொல்கத்தா:-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் கம்பீர், சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் ஆகியோரையும் தக்க வைத்துள்ளது.

10 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 24 வீரர்கள் அந்தந்த அணிகளில் தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அணியிலும் குறைந்தது 16 வீரர்களும், அதிகபட்சமாக 27 வீரர்களும் இடம் பெறலாம். ஏலத்தின் போது ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகபட்சமாக ரூ.60 கோடி வரை செலவு செய்து வீரர்களை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இதில் சென்னை, மும்பை அணிகள் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களுக்கு ரூ.39 கோடியை ஊதியமாக ஒதுக்கி விட வேண்டி இருப்பதால், எஞ்சிய ரூ.21 கோடியை வைத்து தான் அணிக்கான மீதமுள்ள வீரர்களை வாங்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் ஆடாத 2 வீரர் உள்பட 5 பேரை பெற்றிருக்கும் ராஜஸ்தான் அணி இன்னும் 22.5 கோடி செலவு செய்யலாம்.

மேட்ச் கார்டு

இந்த ஏலத்தின் போது முதல் முறையாக ‘மேட்ச் கார்டு’ என்ற புதிய முறை அறிமுகம் ஆகிறது. அதாவது தங்கள் அணியில் இருந்து விடுவித்த வீரரை ஏலத்தின் போது அந்த அணி நிர்வாகம் மீண்டும் வாங்க விரும்பினால், ‘மேட்ச் கார்டு’ வாய்ப்பை பயன்படுத்தி ஏலத்தில் கேட்கப்பட்ட அதிகபட்ச தொகையை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

எத்தனை வீரர்களை வைத்துக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே மேட்ச் கார்டு சலுகை கிடைக்கும். 3 முதல் 5 வீரர்களை வைத்துக் கொள்ளும் அணிக்கு ஒரு மேட்ச் கார்டும், 2 வீரர்களை வைத்துக் கொள்ளும் அணிக்கு 2 மேட்ச் கார்டும், எந்த வீரரையும் தக்க வைக்காத அணிக்கு 3 மேட்ச் கார்டும் வழங்கப்படும். இதன்படி டெல்லி அணி மூன்று வீரர்களை மேட்ச் கார்டு மூலம் மறுபடியும் வாங்க தகுதியுடன் உள்ளது.

எவ்வளவு செலவு செய்யலாம்?

தக்க வைத்துக்கொள்ள வீரர்களுக்கான ஊதியம் போக ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற விவரம் வருமாறு:–

சென்னை சூப்பர் கிங்ஸ்–ரூ.21 கோடி

மும்பை இந்தியன்ஸ்–ரூ.21 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்–ரூ.22.5 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ்–ரூ.60 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்–ரூ.43.5 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–ரூ.38 கோடி

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்–ரூ.30.5 கோடி

ஐதராபாத் சன் ரைசர்ஸ்–ரூ.38 கோடி

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி