இதர பிரிவுகள்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்

‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்

‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’! – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர் post thumbnail image
சென்னையில் நடந்து வரும் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் இடத்தில் பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவக் கலந்தாய்வு நடக்கும் சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ஜூலை 2-ம் தேதி முதல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில் இன்று காலையே பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடம் முழுமையாக நிரம்பின. இதனால் காலை 11 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் உள்ளே விடாமல் காக்க வைக்கப்பட்டனர்.

தகுந்த முறையில் தகவல் தெரிவிக்காததால் கலந்தாய்வு நடக்கும் பகுதியில் பெற்றோர்களும், மாணவர்களும் நீண்ட நேரம் நின்றனர். மாலை 3 மணி முதல் 4 மணி வரை பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 4 மணி அளவில் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகள் உரிய விளக்கம் கொடுக்க முனைந்தனர். ஆனால், `மருத்துவக்கல்லூரியில் இடம் இல்லாதபோது எங்களை ஏன் அழைத்தீர்கள்? எங்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தவில்லை, சென்னைக்கு அழைத்து எங்களைக் கலந்தாய்வு அறைக்கு அனுப்பவும் இல்லை, காலை பதினொரு மணியில் இருந்து காத்திருக்கிறோம். எந்தவிதமான தகவலும் இல்லை. போதுமான அளவு இருக்கைகள் இல்லை என்பதால், இந்த மண் மேட்டின் மீது அமர வைத்து கடைசியில் ஊருக்குக் கிளம்புங்கள் என்று சொல்வது நியாயமா?’ என்று பொரிந்து தள்ளினர் பெற்றோர்கள்.

தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களிடம்,“பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக நிரம்பி விட்டன. நீங்கள் கிளம்பலாம். மற்றவர்கள் கலந்தாய்வுக்குச் செல்லும் வகையில் வழிவிட்டு உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர், கலந்தாய்வுப் பிரிவு அதிகாரிகள். மாணவர்களும், பெற்றோர்களும் விரக்தியில் கலந்தாய்வில் கலந்துகொள்ள எடுத்துவந்த 500 ரூபாய்க்கான வரைவோலையை என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்தனர்.

இதுகுறித்து மருத்துவச் சேர்க்கை கூடுதல் செயலாளர் மருத்துவர் செல்வராஜிடம் பேசினோம். “இன்று 1,943 பேர் அழைக்கப்பட்டனர். பொதுப்பிரிவில் நீட் மதிப்பெண் 429 வரை பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியிலும் 361 மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு சுயநிதிக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்டப் பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் 375 மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு நீட் மதிப்பெண் 344 பெற்றவர்களுக்கும் இடம் கிடைத்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் 132 இடங்கள், பல்மருத்துவக் கல்லூரியில் 16 இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா (அண்ணாமலைப் பல்கலைக்கழக) மருத்துவக் கல்லூரியில் 25 இடங்கள், சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரியில் 10 இடங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவைச் சார்ந்த பிரிவினருக்கு சென்னையைத் தவிர இதர மாவட்ட மருத்துவக் கல்லூரியில் பெரும்பாலான இடங்கள் உள்ளன” என்றார்.

நாளை நடக்கும் கலந்தாய்வுக்கு யார் வரலாம் என்பது குறித்து முன்னரே தகவல் வழங்கினால் உதவியாக இருக்கும் என்று கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இதைக் கூடுதல் செயலாளர் செல்வராஜின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது, “இன்று காலை 11.45 மணி அளவில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரி, இ.எஸ்.ஐ, ராஜா முத்தையா மெடிக்கல் கல்லூரி மற்றும் இதர சுயநிதிக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரம்பி விட்டன. இதனால் இனி உள்ளவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்கள். பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் இடங்கள் உள்ளன. இந்த இடங்களைத் தேர்வு செய்வதாக இருந்தால் கலந்தாய்வுக்கு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி