செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!…

603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!…

603 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து உலக சாதனை படைத்த ரெயில்!… post thumbnail image
டோக்கியோ:-போக்குவரத்து தொழில் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் ஜப்பான் 1964-ம் ஆண்டு முதன்முதலாக புல்லட் ரெயிலை அறிமுகப்படுத்தியது. ஜப்பானில் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய நவீன புல்லட் ரெயில்கள் மிக வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வகை ரெயில்களுக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்ததையடுத்து ரெயில் பாதையில் காந்த சக்தியால் ஒன்றிணைந்து செல்லக்கூடிய வகையில் மிதக்கும் புல்லட் ரெயில்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

‘மாக்லேவ் புல்லட் ரெயில்’ என அழைக்கப்படும் இவ்வகை ரெயில்களை 280 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டோக்கியோ–நகோயா நகரங்களுக்கு இடையே வரும் 2027-ம் ஆண்டில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மிதக்கும் புல்லட் ரெயில்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது 2 நகரங்களுக்கு இடையே உள்ள 280 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 40 நிமிடத்தில் சென்றடைந்து விடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சாரத்தின் மூலம் தண்டவாளத்துக்கும் ரெயிலின் சக்கரத்துக்கும் இடையில் தூண்டப்படும் காந்த சக்தியால் தரையில் இருந்து நான்கு அங்குலம் உயரத்தில் மிதந்தபடி ஓடுவதால் இவ்வளவு வேகத்தை இந்த ரெயிலால் எட்டமுடிகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கென உருவாக்கப்பட்ட தண்டவாளத்தில் இந்த ரெயிலின் வேகத்தை கடந்த 2003-ம் ஆண்டு பரிசோதித்தபோது மணிக்கு 581 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. அதற்கு அடுத்தமுறை 590 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.7 பெட்டிகளை இணைத்து தற்போது பியூஜி மலைப்பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட பரிசோதனையில் இந்த ரெயில் மணிக்கு 603 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று புதிய சாதனையை படைத்துள்ளது. ரெயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய உலக சாதனையாக இந்த வேகம் கருதப்படுகின்றது. இந்த வேக பரிசோதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்வதற்கான முயற்சிகளை ஜப்பான் ரெயில்வே துறை மேற்கொண்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி