அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!…

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது!… post thumbnail image
கொழும்பு:-இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி, பசில் ராஜபக்சே. முந்தைய அரசில் அதிபரின் மூத்த ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் பதவி வகித்து, மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தார். இவர் இலங்கை சுதந்திரா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். அங்கு கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். சிறிசேனா அபார வெற்றி பெற்று, அதிபர் ஆனார். அதைத் தொடர்ந்து 10-ந் தேதி பசில் ராஜபக்சே, தனது மனைவி புஷ்பா ராஜபக்சேயுடன் கொழும்பில் இருந்து அமெரிக்காவுக்கு ஓட்டம் பிடித்தார்.

அவர் தனது பதவி காலத்தில், வாழ்வாதார மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 கோடியே 29 லட்சம்) மோசடி செய்ததாக, புதிய அரசால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்ததால், சர்வதேச போலீஸ் உதவியை இலங்கை அரசு நாடியது. மேலும், நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில், விசாரணை நடத்துவதற்காக நிதி குற்றத்தடுப்பு போலீஸ் முன்னிலையில் அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 124-ன் கீழ், கடுவலை கோர்ட்டு சம்மன் பிறப்பித்தது.

இதையடுத்து அவர் கடந்த 21-ந் தேதி கொழும்பு திரும்பினார். நேற்று அவர் நிதி குற்றத்தடுப்பு போலீஸ் பிரிவில் ஆஜர் ஆனார். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.அவருடன், அவரது முன்னாள் செயலாளர் நிஹால் ஜெயதிலக, மற்றொரு முன்னாள் அதிகாரியான ரக் ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கடுவலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பசில் ராஜபக்சே கைது செய்யப்பட்டிருப்பது, இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி