செய்திகள்,விளையாட்டு மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!… post thumbnail image
மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்தில் எல்.பி.டபுள்யு முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரரான லென்டில் சிம்மன்ஸ் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை பாண்டே கைப்பற்றினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதிரடி வீரரான கோரி ஆண்டர்சனும் (4) சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார். 12 ரன்கள் எடுப்பதற்குள் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து மும்பை இண்டியன்ஸ் அணி தடுமாறியது. அடுத்து ரோகித் சர்மா- ஹர்பஜன் சிங் ஜோடி சென்னை பந்துவீச்சை சமாளிக்க புது வியூகத்துடன் களமிறங்கியது. இவர்கள் இருவரும் சென்னை பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினர்.

2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹர்பஜன் சிங் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோகித் சர்மாவுடன் இணைந்த போலார்ட் அதிரடியாக ஆட, அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. ஜடேஜா வீசிய 14-வது ஓவரில் மட்டும் போலார்ட் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அரை சதத்தை நிறைவு செய்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார். ஆனால், நெஹ்ரா வீசிய அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார்.இதற்கிடையே சென்னை பந்துவீச்சாளர்களை திணறடித்த போலார்ட், 21 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். அதேசமயம் அவருடன் மறுமுனையில் நின்ற ராயுடு, பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்டார். போலார்ட் 64 ரன்களிலும், ராயுடு 29 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.சென்னை தரப்பில் நெஹ்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிராவோ 2 விக்கெட்டுகளும், பாண்டே, மோகித் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 184 ரன்கள் என்ற கடின இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக சுமித் – மெக்கல்லம் இருவரும் இறங்கினார்கள்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய இருவரும் முதல் 6 ஒவரில் 90 ரன்களை குவித்த போதே மும்பையின் தோல்வி உறுதியாகிவிட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 109 ரன்கள் குவித்தார்கள். ஹர்பஜன் சிங் ஒரே ஓவரில் மெக்கல்லம் 46 ரன்களிலும், சுமித் 62 ரன்களிலும் அவுட் ஆனார்கள். அதன்பிறகு களமிறங்கிய சுரெஷ் ரெய்னா வழக்கம் போல அதிரடியாக ஆடினார். டு பிளிஸ்சிஸ், தோனியும் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள்.ரெய்னா இறுதிவரை அவுட் ஆகாமல் 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன் சிங் மட்டும் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை தரப்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நெஹ்ரா ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். இந்த வெற்றி மூலம் சென்னை அணி தொடர்ந்து தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. மும்பை தான் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி