செய்திகள்,திரையுலகம் துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…

துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்…

துணை முதல்வர் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
மஞ்சமாக்கனூர் கிராமம் ஆறுகளால் சூழப்பட்ட கிராமம். சாலை வசதிகள் ஏதும் இல்லாத இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வெளியில் செல்ல வேண்டுமானால் பரிசல் மூலம்தான் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட ஊரில் இரண்டே இரண்டு படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாக்யராஜ், மற்றொருவர் ஜெயராம். பாக்யராஜ் 5ம் வகுப்பும், ஜெயராம் 3ம் வகுப்பும் வரை படித்திருக்கின்றனர். ஊரில் உள்ள மற்றவர்களெல்லாம் முட்டாள்களாக இருக்கிறார்கள். இதே கிராமத்தில் உள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் கேரள பெண் ஸ்வேதா மேனனை பாக்யராஜ் காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பையன் இருக்கிறார். படிப்பறிவில்லாத தன் கிராமத்தில் படிப்பை சொல்லி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன் தங்கையை டீச்சருக்கு படிக்க வைத்து வருகிறார் பாக்யராஜ்.

பாக்யராஜின் நண்பரான ஜெயராமும் அந்த ஊரில் வசிக்கும் சந்தியாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊருக்கு சட்டமன்ற தேர்தல் வருகிறது. பாக்யராஜின் தங்கை, ஜெயராம் உட்பட பலரும் ஒன்று கூடி, இந்த ஊருக்கு இதுவரை ஜெயிச்சு யாரும் எதுவும் செய்யவில்லை. அதனால் நம்ம ஊர் மக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்தலாம் என முடிவு செய்து பாக்யராஜை தேர்தலில் நிறுத்துகின்றனர். அந்த தேர்தலில் பாக்யராஜ் சுயேட்சையாக ஜெயித்து விடுகிறார். தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போன முக்கிய கட்சிகள் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பாக்யராஜை அணுகி ஊருக்கு பல நல்லது செய்கிறோம் என்று பாக்யராஜை நம்ப வைத்து ஊருக்கு ஒன்றும் செய்து தராமல் ஏமாற்றுகின்றனர். இந்த நிலையில், ஜெயராமும், பாக்யராஜும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதாவது பாக்யராஜ் இறந்துவிட்டால் அந்த ஊருக்கு இடைத்தேர்தல் வரும். சாதாரண தேர்தலை விட இடைத்தேர்தலுக்கு அரசியல்வாதிகள் போட்டி போட்டு செலவழிப்பர். எனவே பாக்யராஜ் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பவைத்து ஜெயராம் பாக்யராஜை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். பாக்யராஜை மறைத்து வைத்ததன் மூலம் அந்த ஊரில் என்ன நடந்தது? இடைத்தேர்தல் வந்ததா? ஊருக்கு நல்லது நடந்ததா? என்பதை அருமையான முறையில் விளக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் பாக்யராஜ். நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் திரைக்கதையில் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வழக்கமான பாக்யராஜ் படங்களில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் இப்படத்தில் அமைந்திருக்கின்றன. முதுமை தெரியாத அளவிற்கு இந்த வயதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் பாக்யராஜ். ஜெயராமுடன் இணைந்து நடித்திருக்கும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். பாக்யராஜின் நடன அமைப்புகள் இல்லாததே வருத்தம்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கமான குறும்புதனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஜெயராம். பாக்யராஜின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சந்தியாவும் படத்தின் காட்சிக்கேற்ப நன்றாக நடித்துள்ளனர். பாக்யராஜின் மகனாக வரும் சிறுவன் காமெடி காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறான்.படத்தில் வரும் தில்லு முல்லு காட்சிகள், குடும்பம் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்தாலும், ஒரு சில காட்சிகள் மிகவும் நீளமாக உள்ளது. அதை இயக்குனர் விவேகானந்தன் குறைத்திருக்கலாம். ஜெய், பாலாஜி, பிரதீப் ஆகியோரின் இசையில் பாடல்கள் சுமாராக உள்ளது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவில் ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘துணை முதல்வர்’ வெற்றிக்கூட்டணி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி