முன்னரே,மழைக்கான அறிகுறிகள் தென்பட்டதால் தொடக்க விழாவில் மழையின் குறுக்கீடு இருக்கக்கூடாது என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தவண்ணம் இருந்தனர். ஆனால், துவக்க விழாவினைக் காண ஏராளமான ரசிகர்கள் ஸ்டேடியத்தில் குவிந்திருந்த போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் விழாவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 7.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த விழா 9 மணிக்கே ஆரம்பமானது. இசை அமைப்பளர் ப்ரீத்தம் ஒரு வங்காளப் பாடலுடன் விழாவை உற்சாகமாகத் தொடக்கி வைத்தார். நடிகர் சயீப் அலிகான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரசிகர்களின் ஆரவாரத்துடன் மேடையேறிய சயீப், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான், மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா என்று ஒவ்வொரு கேப்டனாக மேடைக்கு அழைத்தார். விழா நடைபெற்றது கொல்கத்தாவில் என்பதால் அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் மேடையேரும் போது ரசிகர்களின் கைத்தட்டலும் விசில் சத்தமும் விண்ணைப் பிளந்தது.
பிறகு முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி கிரிக்கெட்டின் வீரம் பேசும் உறுதிமொழியை வாசித்த பிறகு தோனி தொடங்கி அனைத்து அணி கேப்டன்களும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் பேட்டில் கையெழுத்திட்டனர். பின்னர் மேடையில் இருந்த பளபளக்கும் ஐபிஎல் வெற்றிக் கோப்பை முன்பாக அனைவரும் கம்பீரமாக அணிவகுத்து நின்றனர். ’சகலகலா வல்லவன்’ படத்தின் தொடக்கப் பாடலைப் போல, விழா மேடைக்கு பைக்குடன் வந்த சாகித் கபூர், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். 80-களில் உள்ள டிஸ்கோ ஸ்டைல் உடையில் சில ஹிந்தி பாடலுக்கு அவர் நடனமாடினார். அடுத்து அனுஷ்கா சர்மாவின் அசத்தல் நடன நிகழ்ச்சி அரங்கேறியது. பின் வந்த பர்கான் அக்தர் தனது இசைக்குழுவுடன் இசைக் கச்சேரி நடத்தினார். ஹிருத்திக் ரோஷன் தனது தூம் 2 படப்பாடலுக்கு அதிரடியாக நடனமாட, தீப் பொறிகள் பறக்க வண்ணமயமாக ஐபிஎல் தொடக்க விழா நிறைவு பெற்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி