செய்திகள்,திரையுலகம் சகாப்தம் (2015) திரை விமர்சனம்…

சகாப்தம் (2015) திரை விமர்சனம்…

சகாப்தம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
கிராமத்தில் தாயை இழந்து தந்தையோடு வாழ்ந்து வரும் சண்முகபாண்டியன், கிராமத்தில் விவசாயம் ஏதும் இல்லாததால் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பன் ஜெகனோடு ஊர் சுற்றி வருகிறார். இவர் தனது மாமன் மகளான நேகாவை காதலித்தும் வருகிறார். இந்த நிலையில், மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பும் இவரது நண்பரான பவர் ஸ்டார், மலேசியாவில் பெரிய கம்பெனியில் தான் வேலை பார்ப்பதாகவும், நல்ல சம்பளம் வாங்குகிறேன் என்று இவர்களிடம் சொல்லி பிலிம் காட்டுகிறார். இதையெல்லாம் உண்மை என்று நம்பிய சண்முகபாண்டியனும், ஜெகனும் மலேசியா செல்ல முடிவெடுக்கிறார்கள். இதே ஊரில் வசிக்கும் தேவயானி, மலேசியாவுக்கு சென்ற தனது கணவர் ரஞ்சித் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியாமல் தனிமையிலேயே வாழ்ந்து வருகிறார். ரஞ்சித் வெளிநாடு செல்வதற்காக கந்துவட்டிக்காரரிடம் வாங்கிய பணத்தை கட்ட முடியாமல் தவிக்கும் தேவயானியிடம் கந்து வட்டிக்காரன் தவறாக நடக்க முயற்சிக்கிறார்.

அவனிடமிருந்து சண்முகபாண்டியன் தேவயானியை காப்பாறுகிறார். இதனால் சண்முகபாண்டியன் மீது தனி பாசம் காட்டும் தேவயானி, அவன் மலேசியாவுக்கு செல்லவிருப்பதை அறிந்ததும், அவனிடம் தனது கணவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.
இந்நிலையில், ஒருநாள் சண்முகபாண்டியனும், ஜெகனும் மலேசியாவுக்கு பயணப்படுகிறார்கள். மலேசியாவில் சென்று இறங்கும் இவர்களை வரவேற்க யாரும் வரவில்லை. திக்குத் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் இவர்களை விமான நிலைய அதிகாரியான தலைவாசல் விஜய் கவனித்து, இவர்கள் தமிழர்கள் என்றதும் இவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறார். அதன்படி, இவர்கள் பவர் ஸ்டாரின் முகவரியை அவரிடம் கூற, தலைவாசல் விஜய் இருவரையும் அங்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு பவர் ஸ்டாரை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சியாகிறார்கள். ஏனென்றால், பெரிய கம்பெனியில் வேலை செய்வதாக கூறிய பவர் ஸ்டார், இங்கு ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிவதை பார்த்ததும் அவர் மீது கோபமடைகிறார்கள். தன்னை நம்பி அவர்கள் வந்துள்ளதால் தன்னுடைய நண்பரான சிங்கம் புலியிடம் வேலைக்கு அனுப்பி வைக்கிறார் பவர் ஸ்டார். ஆனால், அந்த வேலையில் இருவருக்கும் ஈடுபாடு இல்லை.

இதற்கிடையில் மலேசியாவில் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் சுப்ரா ஒரு பிரச்சினையில் மாட்டி விடுகிறார். இதிலிருந்து தப்பிக்க சண்முகபாண்டியன் அவருக்கு உதவுகிறார். இதனால், சண்முகபாண்டியன் மீது ஒருவிதமான பாசம் அவருக்குள் ஏற்படுகிறது. பிறகு சண்முக பாண்டியனை தனது துப்பறியும் நிறுவனத்திலேயே பணியமர்த்துகிறார் சுப்ரா. துப்பறியும் நிறுவனத்தின் மூலம் அங்குள்ள மலேசியா போலீசாரிடம் மிகவும் நட்பாக பழகி வருகிறார் சணுமுக பாண்டியன். ஒருமுறை துப்பறியும் நிறுவனம் மூலம் தனது நண்பர்களை வெளியே கொண்டுவர ஜெயிலுக்கு செல்லும் சண்முகபாண்டியன் அங்கு ரஞ்சித்தை பார்க்கிறார்.அவர் எப்படி ஜெயிலுக்கு வந்தார் என்பது குறித்து அவரிடம் கேட்கும்போது, மருந்து பொருட்களில் கலப்படம் செய்யும் கம்பெனி ஒன்று தன்னையும், தன்னுடன் வேலை செய்பவர்களையும் அடிமையாக வைத்து கொடுமைப்படுத்தியதையும், தான் அங்கிருந்து தப்பி வந்ததையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார். மேலும், தன்னிடம் மலேசியாவில் இருப்பதற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் சிறையில் தள்ளியதையும் கூறுகிறார். பின்னர், அவருடன் இணைந்து மருந்து கலப்படம் செய்யும் கும்பலை போலீசிடம் சண்முக பாண்டியன் மாட்டிவிட்டாரா? அடிமைகளை மீட்டாரா? என்பதே மீதிக்கதை. கதாநாயகனாக நடித்திருக்கும் சண்முக பாண்டியனுக்கு ஆக்ஷன் காட்சிகள் நன்றாகவே வருகிறது. திரையில் பார்க்க சுறுசுறுப்பாகவும் வருகிறார். நடனத்திலும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இந்த படத்தில் இவருக்கு இரண்டு நாயகிகள். இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்திருக்கிறார்.

சண்முகபாண்டியனின் நண்பர்களாக வரும் ஜெகன், பவர் ஸ்டார், சிங்கம்புலி ஆகியோர் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்கள். தலைவாசல் விஜய், ரஞ்சித், தேவயானி, சுரேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மலேசியாவில் போலீஸ் உயரதிகாரியாக விஜயகாந்த் வருகிறார். சில காட்சிகளே வந்தாலும் அதே கம்பீரத்துடன் வந்து போயிருக்கிறார்.வேலையில்லாமல் கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் வெளிநாட்டுக்கு போனால் என்ன நிலைமைக்கு ஆளாகிறார்கள் என்பதை சகாப்தம் படம் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். மேலும், வெளிநாட்டுக்கு போகாம சொந்த ஊரிலேயே வேலை தேடிக் கொள்ளவேண்டும் என்பதையும் படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். இதற்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனால், திரைக்கதையும், கதையும் தமிழ் சினிமாவுக்கு அதர பழசானது என்பதால் சற்று ரசிக்க முடியவில்லை. விறுவிறுப்பான கதையில் கொஞ்சம்கூட திரில் இல்லாதது வருத்தம்தான்.கார்த்திக் ராஜா இசையில் ‘கரிச்சான் குருவி’ பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமை. ‘அடியே ரதியே’ பாடல் குத்தாட்டம் போட வைக்கிறது. மற்றபடி பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்தான்.

மொத்தத்தில் ‘சகாப்தம்’ சாகசம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி