அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!…

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: ஜனாதிபதி வீட்டுக்கு சென்று வழங்கினார்!… post thumbnail image
புதுடெல்லி:-பா.ஜ.க. மூத்த தலைவர் வாஜ்பாய் 1998–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமர் பதவியை வகித்த பெருமை, இதன் மூலம் வாஜ்பாய்க்கு கிடைத்தது. பிரதமராக இருந்த 5 வருட காலத்தில் இந்தியாவின் அபரிதமான மேம்பாட்டுக்காக வாஜ்பாய் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார். வயதான காரணத்தால் அவர் அரசியலில் இருந்து விலகி டெல்லியில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது அவருக்கு 90 வயதாகிறது.

வாஜ்பாயின் நிகரற்ற சேவைகளை போற்றி கவுரவிக்கும் வகையில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசால் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக பாரத ரத்னா விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில்தான் வழங்கப்படும். வாஜ்பாய்க்கு வயதாகி விட்டதால், அவர் வீட்டுக்கே சென்று நேரில் பாரத ரத்னா வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாஜ்பாய் வீட்டுக்கு சென்றார். அங்கு பாரத ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாரத ரத்னா விருது பெறுவதை முன்னிட்டு, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், மேற்கு வங்க முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரபல கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வருகிற 30–ந்தேதி இதற்கான விழா நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி