செய்திகள் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!… post thumbnail image
பாட்னா:-பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மா மங்கல கவுரி கோயில் அருகே பிச்சை எடுத்து பிழைத்து வரும் 40 பிச்சைக்காரர்கள் ஒன்றிணைந்து ’மங்கலா’ என்ற பெயரில் 6 மாதத்துக்கு முன்னர் புதிய வங்கி ஒன்றை தொடங்கி உள்ளனர். வாரம் தோறும் இந்த 40 பேரும் தலா 20 ரூபாயை டெபாசிட் செய்து வருகின்றனர். இதன்மூலம் சேரும் வாராந்திர வசூல் தொகையான 800 ரூபாயை மூலதனமாக வைத்து இந்த வங்கி இயங்கி வருகின்றது.

இந்த குழுவை சேர்ந்த ராஜ் குமார் மஞ்சி என்பவர் இதன் மேனேஜராக உள்ளார். மஞ்சியின் மனைவி நகினா தேவி பொருளாளராக இருக்கிறார். செயலாளராக மாலதி தேவியும், பிச்சைக்காரர்களிடம் இருந்து வார சந்தா தொகையை வசூல் செய்யும் ஏஜெண்டாக வனரிக் பஸ்வான் என்பவரும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வங்கியில் மேலும் பல பிச்சைக்காரர்களை இணைத்து, அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவி செய்வதே எங்கள் நோக்கம் என மங்கலா வங்கியின் மேனஜரான மஞ்சி கூறுகிறார். இந்த வங்கியினால் அடைந்த பலனைப்பற்றி குறிப்பிட்ட மஞ்சி, சமீபத்தில் என் மகளும், சகோதரியும் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்கள்.

அப்போது, சிகிச்சை செலவுக்கு எங்கள் வங்கி 8 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடன் தந்து உதவியது. என்னைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியோ, தனியார் வங்கியோ உரிய ஜாமின்தாரர் இல்லாமல் கடன் கொடுக்க முன்வருவதில்லை. இதைப்போன்ற சூழலில் எங்கள் ’மங்கலா வங்கி’ பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறுகிறார். மாநில அரசின் சமூக நலத்துறை கடந்த ஆண்டு வலியுறுத்தியதன் விளைவாக இந்த வங்கியை தொடங்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி