செய்திகள்,திரையுலகம் கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…

கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி ஊரை விட்டு ஐதராபாத்திற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் ராஜ் லிப்ட் கேட்டு இவர்கள் காரில் ஏறிச் செல்கிறார். அப்போது ஸ்வேதாவை ராஜ் அடைய நினைக்கிறான். இவர்கள் செல்லும் வழியில் காதல் ஜோடியிடம் வம்பு செய்கிறார் ராஜ். இதனால் ராஜை கிழே இறக்கிவிட்டு காதல் ஜோடி தப்பித்து செல்கிறது. காதல் ஜோடி காரில் சென்று கொண்டிருக்கும்போது வேறொரு கார் மூலம் இவர்களை பின் தொடர்ந்து வந்து மீண்டும் இவர்கள் காரில் ஏறிக்கொள்கிறார் ராஜ். காரை எடுக்க மறுக்கும் அபிஷேக்கை, ஸ்வேதா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி காரை எடுக்க வைக்கிறார்.

இதற்கிடையில் மனநிலை மருத்துவமனை காவலாளி கொலை, நெடுஞ்சாலை காரில் பிணம் குறித்து போலீஸ் அதிகாரியான சேது விசாரித்து வருகிறார். இந்த கொலைகளை ராஜ்தான் செய்தார் என்று உறுதி செய்து ஐதராபாத் நெடுஞ்சாலையில் செல்கிறார் சேது. காரில் செல்லும் ராஜ் மற்றும் காதல் ஜோடி சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு ராஜை விசாரிக்கும்போது போலீசை அடிக்கிறார். இந்த இடைவேளியில் அபிஷேக், ஸ்வேதா தப்பி செல்கிறார்கள். பின்னர் ராஜ் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அனைவரையும் அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் காதல் ஜோடி தேடி அலைகிறார். இறுதியில் ராஜ் காதல் ஜோடியை பிடித்தாரா? போலீசிடம் ராஜ் பிடிபட்டாரா? ராஜ் மனநிலை மருத்துவமனைக்கு செல்ல காரணம் என்ன? என்பதே மீதிக்கதை. படத்தில் நாயகனாக ராஜுக்கு வசனமே கிடையாது. பார்வையாலே மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாக வந்து செல்கிறார். இவரே தயாரித்து இயக்கியிருக்கிறார். நெடுஞ்சாலையிலேயே படம் முழுவதும் பயணிக்கிறது. நெடுஞ்சாலையில் செல்லும்போது வறண்ட இடத்தை நிறைய காண்பித்திருக்கிறார். அதுபோல்தான் படமும் வறண்டு காணப்படுகிறது.

படத்தில் நீண்ட காட்சிகளை தவிர்த்திருக்கலாம். படம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் பின்னர் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமலே செல்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்ல குணமும் கெட்ட குணமும் இணைந்து இருக்கின்றது. சூழலுக்கு ஏற்ப அந்த குணம் வெளியே தெரிகிறது என்ற நல்ல கருத்தை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் ராஜ், அதை கொஞ்சம் வித்தியாசமாக வேறு கோணத்தில் சொல்லியிருக்கலாம்.காதல் ஜோடியாக வரும் அபிஷேக், ஸ்வேதா ஆகியோர் ராஜ்ஜிடம் இருந்து தப்பிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் மைனா சேது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சிறிதளவே வந்தாலும் துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் பூஜா. இவருடைய காட்சிகளை அதிகம் வைத்திருக்கலாம். ராகுல்ராஜ் இசையில் பாடல்கள் ஏதும் எடுபடவில்லை. ஆனால் பின்னணியில் பிண்ணியிருக்கிறார். கிஷோர்மணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. சண்டை காட்சிகள் மற்றும் நெடுஞ்சாலையை அழகாக படம் பிடித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ மிருகமே அதிகம்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி