செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை… post thumbnail image
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அரை இறுதி போட்டிக்கு இந்தியா– ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா– நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளும் பலம் பொருந்தியவை. அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார்கள். இதனால் அரை இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். இந்த 4 அணிகள் பற்றிய கண்ணோட்டம் வருமாறு:–

இந்தியா

கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் வெற்றி பெறவில்லை. இதனால் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு பற்றி கேள்விக்குறி எழுந்தது. ஆனால் நேர்மாறாக இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

‘லீக்’ ஆட்டத்தில் அனைத்திலும் வென்றது. கால்இறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்தியா பவுலிங், பீல்டிங்கிலும் அசத்தி வருகிறது. 7 போட்டியிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது. வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். இருந்தபோதிலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ஆஸ்திரேலியா

உலக கோப்பை நடத்தும் ஆஸ்திரேலியா ‘லீக்’ ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. வங்காளதேசத்துடனான போட்டி மழையால் ரத்து ஆனது. 4 போட்டியில் வென்றது. கால்இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

அந்த அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் சவால் அளிக்கக்கூடியது. ஆல்–ரவுண்டர்கள் நிறைந்து உள்ள அணியாக இருக்கிறது. ஆனால் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது குறையாக தெரிகிறது. இருந்தாலும் வேகப்பந்து வீச்சு அசத்தலாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டி சிட்னியில் நடக்கிறது. இந்த மைதானத்தில் சுழற்பந்து எடுபடும் என்பதால் அதற்க ஏற்ப அணி தேர்வு இருக்கும்.

தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. ‘நாக்அவுட்’ சுற்றில் தோற்று வெளியேறி இருந்தது. இம்முறை கோப்பையுடன் தான் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அந்த அணி வீரர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். அந்த அணியும் அனைத்து துறையிலும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. கால்இறுதியில் இலங்கை அணியை 130 ரன்னில் சுருட்டியது அந்த அணி பந்துவீச்சின் எடுத்துக்காட்டு ஆகும். மேலும் கேப்டன் டிவில்லியர்ஸ் உள்பட பல அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பது கூடுதல் பலம்.

நியூசிலாந்து

போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து அணியும் தென்ஆப்பிரிக்காவை போலவே கோப்பையை கைப்பற்றியது இல்லை. ‘லீக்’ ஆட்டத்தில் அனைத்திலும் வென்று அசத்திய நியூசிலாந்து கால்இறுதியில் வெஸ்ட்இண்டீசை வெளியேற்றியது. வலுவான பேட்டிங், நேர்த்தியான பந்துவீச்சு அந்த அணிக்கு பலமாக இருக்கிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக குப்தில் இரட்டை சதம் அடித்து அசத்தியது மேலும் வலு சேர்ப்பதாக இருக்கிறது. அரை இறுதியில் தென்ஆப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் (ஆக்லாந்து) சந்திப்பது நியூசிலாந்துக்கு சாதகமாக கருதப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததே இல்லை. ஆனால் இம்முறை இரு அணிகளில் ஒரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி