செய்திகள்,திரையுலகம் அகத்திணை (2015) திரை விமர்சனம்…

அகத்திணை (2015) திரை விமர்சனம்…

அகத்திணை (2015) திரை விமர்சனம்… post thumbnail image
ஊர் தலைவராக இருக்கும் நரேனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடனே இவரது மனைவி இறந்து விடுகிறார். மனைவியை இழந்த நரேன் இனி வாழும் வாழ்க்கை மகளுக்காக தான் என்று எண்ணி ஒவ்வொரு நொடியையும் தன் மகளுக்காக அர்ப்பணித்து வாழ்கிறார். வளர்ந்து பெரிய மனுஷியான மகிமா, தன் அப்பாவிடம் அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார். இவர்கள் வீட்டில் உண்மை ஊழியனாகவும், டிரைவராகவும் மற்றும் இவர்கள் வீட்டு வேலைக்காரனாகவும் இருந்து வரும் நாயகன் வர்மா, நரேன் மீது மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கிறார். நரேனும் வர்மாவை தன் வீட்டில் ஒருவனாகவே நடத்துகிறார்.

ஒருநாள் மகிமா பைக்கில் செல்லும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து விடுகிறார். இதை பார்க்கும் வர்மா, மகிமாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். அப்போது மகிமா அணிந்திருந்த, தன் உயிருக்கும் மேலாக நினைத்திருக்கும் தாயின் தொப்புள் கொடியாலான செயின் தொலைந்து போகிறது. இதனால் மிகவும் வருத்தமடைகிறார் மகிமா. தொலைந்து போன அந்தச் செயின் வர்மாவிற்கு கிடைக்க, உடனே அதை மகிமாவிடம் கொடுக்கிறார். இதனால் மகிழ்ச்சியடையும் மகிமா, தன் உயிரையும் காப்பாற்றி, உயிருக்கு மேலாக நினைக்கும் செயினையும் கொடுத்த வர்மா மீது காதல் வயப்படுகிறார். பொத்தி பொத்தி வைத்திருந்த தன் காதலை ஒரு கட்டத்தில் வர்மாவிடமே சொல்கிறார். வர்மாவின் மனதிலும் காதல் இருக்கிறது. ஆனால், முதலாளி நரேன் மீது உள்ள மரியாதையால் மகிமாவின் காதலை ஏற்க மறுக்கிறார்.

இந்நிலையில் பக்கத்து ஊரில் இருக்கும் ஜமீன்தாரின் மகனை மகிமாவிற்கு திருமணம் பேசி முடிக்கிறார் நரேன். இதன் பின்னர் நரேனுக்கு ஆகாத ஒருவர், மகிமாவும் வர்மாவும் காதலிப்பதாக புரளியை கிளப்பி விடுகிறார். இதை நம்ப மறுக்கிறார் நரேன். தன்னால் திருமணம் நின்றுவிடக் கூடாது என்று எண்ணிய நரேன், வெளியூரில் வேலை கிடைத்து விட்டது என்று பொய் கூறி வேலையை விட்டு செல்கிறார்.பாசப்போராட்டம் மற்றும் காதல் போராட்டத்துக்கு மத்தியில் மகிமா யாரைக் கைப்பிடித்தார்? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வர்மா, எந்தவித அலட்டலும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வலம் வந்திருக்கிறார். காதலா, விசுவாசமா என்று இரண்டு கோணத்தில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு ஹீரோவுக்கான ஆக்‌ஷன், குத்துப்பாட்டு ஏதும் இல்லாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தனது துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நாயகி மகிமா. கிராமத்து கதாபாத்திரம் இவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மகிமாவிற்கு அப்பாவாக நடித்திருக்கும் நரேனுக்கு, படத்தில் ஹீரோவை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மகளுக்காக வருந்தும் காட்சிகளில் அழுத்தமாக பதிந்திருக்கிறார். பாசமான அப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.யதார்த்தமான கிராமத்து கதையை மையமாக வைத்து, அதில் தந்தைக்கும், மகளுக்கும் இடையே உள்ள பாசத்தை உணர்வு பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் யு.பி.மருது. மகளுக்காக வாழும் தந்தை, விசுவாசத்திற்காக காதலை வெறுக்கும் நாயகன், தந்தை பாசமா, காதலா என்ற நிலையில் நாயகி என்று தன் திரைக்கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து இயக்கியிருக்கிறார். ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் நெருடலை ஏற்படுத்துகிறது. மரியா மனோகர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அகிலன் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘அகத்திணை’ பாசம்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி