செய்திகள்,திரையுலகம் ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…

ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்…

ராஜதந்திரம் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் வீரா தன் நண்பர்களான அஜய் பிரசாத் மற்றும் சிவாவுடன் இணைந்து சிறு சிறு திருட்டு வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர்கள் ஒருநாள் ஷேர் ஆட்டோவில் போகும்போது நாயகி ரெஜினாவை சந்திக்கிறார்கள். எம்.எல்.எம்மில் வேலை பார்த்து வரும் ரெஜினா இவர்களையும் எம்.எல்.எம்.மில் சேரச் சொல்லி வற்புறுத்துகிறார். அவர்களிடம் தன்னுடைய செல்போன் நம்பரையும் கொடுத்துவிட்டு செல்கிறார். பின்னர் நாயகியை பார்ப்பதற்காகவே எம்.எல்.எம்மில் சேர்ந்து அவளுடன் பல சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார் வீரா. இதன்மூலமாக நாயகியுடன் காதல் வளர்க்கிறார் வீரா.

ஒருநாள் இருவரும் சேர்ந்து ஆட்களை சேர்க்க செல்லும் இடத்தில் சிலபேர் இவளை இரட்டை அர்த்த வசனங்களால் கேலி செய்கின்றனர். இதனால், கோபமடைந்த வீரா அவளை கடுமையான வார்த்தைகளால் திட்டுவிடுகிறார். பின்னர் வீராவை சமாதானப்படுத்தும்விதமாக தான் இந்த வேலையில் சேர்ந்ததற்கான காரணத்தை விளக்கி கூறுகிறாள் ரெஜினா. நரேன் நடத்திய பைனான்சில் அதிக வட்டி தருவதாக செய்யப்பட்ட விளம்பரத்தை நம்பி, தனது அப்பா நிறைய கடன் வாங்கி அந்த பைனான்ஸ் கம்பெனியில் பணம் போட்டதையும், பின்னர் பைனான்ஸ் கம்பெனி மூடப்பட்டதும், அந்த வேதனையில் தனது அப்பா இறந்துவிட்டதையும், கடனால் தத்தளிக்கும் தனது குடும்பத்தை காப்பாற்றவே இந்த வேலையில் சேர்ந்ததாகவும் அவனிடம் கூறுகிறாள். இதையெல்லாம் கேட்ட வீரா, அவளுக்கு தன்னால் முடிந்தளவு ஏதாவது ஒரு உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறான். இந்நிலையில், பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுதலையாகும் நரேன், போலி டாக்குமெண்டுகள் தயாரிக்கும் இளவரசுவிடம் தஞ்சம் புகுகிறார்.

அவர் மூலமாக பட்டியல் சேகர் நடத்தும் மிகப்பெரிய நகைக் கடையை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார். இதற்கு வீரா மற்றும் அவர்களது நண்பர்களை உதவிக்கு அழைக்கிறார். ஆனால், அவ்வளவு பெரிய நகைக் கடையை தங்களால் கொள்ளையடிக்க முடியாது என கைவிரிக்கின்றனர் வீரா மற்றும் அவரது நண்பர்கள்.ஆனாலும், வீரா மற்றும் அவரது நண்பர்களுக்கு பணம் தேவைப்படுவதால், ஏதாவது கொள்ளையில் ஈடுபட துடிக்கிறார்கள். அப்போது, கருப்பு பணமாக ரூ.10 லட்சம் ஒரு இடத்தில் கைமாறுவதாக இவர்களுக்கு தகவல் வருகிறது. அதை கொள்ளையடிக்க போகும்போது பணத்துக்கு பதில் அங்கு தங்க கட்டி இருப்பதை பார்க்கிறார்கள்.இருந்தாலும், அதை கொள்ளையடித்து தப்பித்துச் செல்லும்வேலையில், தங்க கட்டிக்கு சொந்தமானவர்கள் இவர்களை சுற்றி வளைக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும்போது, அந்த தங்கக்கட்டிகளை தவற விடுகிறார்கள். இருவருக்கும் இது கிடைக்காமலே போய்விடுகிறது. எனவே, வீரா மற்றும் அவரது நண்பர்களை தங்க கட்டிகளுக்கு சொந்தமான கும்பல் தேடி வருகிறது.

ரகசியமாக திட்டமிட்ட இந்த கொள்ளை சம்பவத்தை யார் காட்டிக் கொடுத்தது என்று யோசனை செய்யும் வேளையில், இதற்கெல்லாம் நரேன்தான் காரணம் என்பதை அறிகிறான் வீரா. இதனால் கோபமடைந்த அவன், பட்டியல் சேகரிடம் சென்று நரேன் அவருடைய நகைக் கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பதை கூறுகிறான்.பதிலுக்கு பட்டியல் சேகரும் நரேனை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது நடக்கும் விபத்திலிருந்து பலத்த காயங்களுடன் தப்பிக்கும் நரேனுக்கு நேரடியாக மிரட்டலும் கொடுக்கிறார் பட்டியல் சேகர். நரேனை பற்றி பட்டியல் சேகரிடம் காட்டிக் கொடுத்த வீராவிடம் இளவரசு நரேனை பற்றிய உண்மையான விவரங்களை கூறுகிறார்.பட்டியல் சேகரால்தான் நரேன் இந்த நிலைமைக்கு ஆளானார் என்பதை அறிந்ததும், வீரா நரேனின் அறிவுரைப்படி பட்டியல் சேகரின் நகைக் கடையை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். அதன்பின்னர், இவர்கள் தங்களது ராஜதந்திரத்தால் பட்டியல் சேகரின் நகையை கொள்ளையடித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. நாயகன் வீரா ‘நடுநிசி நாயகள்’ படத்தின் ஹீரோ. ‘நடுநிசி நாய்கள்’ படத்தில் நன்றாக நடித்திருந்தாலும், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் இவருக்கு தேடித்தரவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றார்போல் இவரது நடிப்பும் அழகாக இருக்கிறது. நகைக்கடையை கொள்ளையடிக்க இவர் போடும் திட்டங்கள் எல்லாம் சூப்பர்.நாயகி ரெஜினா வழக்கமான கதாநாயகிபோல், நாயகனுடன் ஒரு டூயட், அதன்பிறகு ஒருசில காட்சிகள் என வந்துவிட்டு போயிருக்கிறார். இவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.நாயகனின் நண்பர்களாக வரும் அஜய் பிரசாத், சிவா இருவரில் சிவா செய்யும் காமெடிகள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. அஜய் பிரசாத் நாயகனுடன் இணைந்து நடிப்புக்கு போட்டி போட்டிருக்கிறார்.
பைனான்ஸ் கம்பெனி வைத்திருப்பவராக வரும் நரேனுக்கு படத்தில் காட்சிகள் குறைவே. இருந்தாலும் அதற்கேற்றார்போல் அளவான நடிப்பில் மிளிர்கிறார். பட்டியல் சேகர் அமைதியான வில்லனாக வலம் வந்திருக்கிறார். வில்லனுக்குண்டான ஆக்ரோஷம் இல்லாவிட்டாலும், அமைதியிலேயே அனைத்து காரியங்களையும் செய்துவிடும் வில்லனாக பளிச்சிட்டிருக்கிறார்.இயக்குனர் டான் சாண்டிக்கு இது முதல் படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு படத்தை அழகாக எடுத்திருக்கிறார். திரைக்கதையை அழகாக கையாண்டிருக்கிறார். நகை கடையை திருடுவதற்கும் திட்டம் போடும் காட்சிகள் எல்லாம் சீட்டின் நுனிக்கு நம்மை இழுத்திருக்கிறது. நிறைய விஷயங்களை யோசித்து அதை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே இவருடைய திரைக்கதைதான்.ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரேயொரு பாடல்தான். அந்த பாடலையும் ஜி.வி.பிரகாஷே பாடியிருக்கிறார். கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. திருடப்போகும் காட்சிகளில் வரும் பின்னணி இசை வெகுவாக ரசிக்க வைக்கிறது. புதுமுக இயக்குனர், புதிய படம் என்ற உணர்வு இல்லாமல் பெரிய இயக்குனரின் படம் போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது ராஜதந்திரம்.

மொத்தத்தில் ‘ராஜதந்திரம்’ ராஜநடை………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி