விளையாட்டு மகா மகா (2015) திரை விமர்சனம்…

மகா மகா (2015) திரை விமர்சனம்…

மகா மகா (2015) திரை விமர்சனம்… post thumbnail image
தமிழ் நாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு செல்கிறார் நாயகன் மதிவாணன். அங்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அனுஸ்ரீ என்னும் பெண்ணை சந்திக்கிறார். இவருடன் நட்புடன் பழகுகிறார் மதிவாணன். ஒருநாள் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு பெண்ணை காணவில்லை என்று கூறி அவரிடம் விசாரிக்கிறார்கள். அப்போது, இந்த வீட்டுக்கு புதியதாக வந்திருப்பதாக கூறிய மதிவாணன், தனக்கு எந்த பெண்ணையும் தெரியாது என்று கூறி போலீஸ்காரர்களை அனுப்பி வைக்கிறார். இதுஒருபுறமிருக்க, மதிவாணன் தன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நாயகி மெலிசாவை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார். இருவரும் காதலை வெளிப்படுத்தி காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர்.

இந்நிலையில், அனுஸ்ரீயை மீண்டும் சந்திக்கிறார் மதிவாணன். அப்போது மதிவாணன் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி தனது காதலியான மெலிசாவின் புகைப்படத்தை அனுஸ்ரீக்கு காட்டுகிறார். போட்டோவை பார்த்த அனுஸ்ரீ, =இந்த பெண் என் தோழி. இவள் காணாமல் போய் நீண்ட நாட்கள் ஆகிறது. இவளை நாங்கள் தேடி வருகிறோம் என்று கூறுகிறார். இதைக் கேட்ட மதிவாணன், நான் காதலிக்கும் பெண், தினமும் சந்திக்கும் பெண் எப்படி காணாமல் போயிருக்க முடியும்? என்று நினைத்து அதிர்ந்து போகிறார்.
அதன்பின்னர் மெலிசாவின் முழு விவரத்தையும் அனுஸ்ரீயிடம் கேட்டறிகிறார் மதிவாணன். இதையெல்லாம் கேட்ட மதிவாணன் குழப்பத்தில் ஆழ்கிறார். பின்னர் அனுஸ்ரீயும், மதிவாணனும் மெலிசாவை தேட ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் மதிவாணனுடன் பழகிய மெலிசா யார்? அவர் கிடைத்தாரா? அவருக்கு என்ன ஆனது? மதிவாணன்-மெலிசா இணைந்தார்களா? என்பதை விளக்குவதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மதிவாணன், ஆர்ப்பாட்டமில்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியை பற்றி விசாரிக்கும் காட்சிகளில் யதார்த்தமாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மெலிசா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். தோழியாக வரும் அனுஸ்ரீ அழகாக இருக்கிறார். நடிப்பிலும் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். டாக்டராக வரும் நிழல்கள் ரவி அவருக்கே உரிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிரைம் திரில்லர் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் மதிவாணன் சக்திவேல், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமலே கொண்டு சென்றிருக்கிறார். படம் மிகவும் நிதானமாக நகர்கிறது. வெளிநாட்டினரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார். பாவலர் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். பிரேமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். ஆஸ்திரேலியாவின் அழகை நம் கண்முன்னால் நிறுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘மகா மகா’ காதல்………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி