செய்திகள்,திரையுலகம் கே 3 (2015) திரை விமர்சனம்…

கே 3 (2015) திரை விமர்சனம்…

கே 3 (2015) திரை விமர்சனம்… post thumbnail image
கதிர், கஞ்சா, கருப்பு இவர்கள் மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். ஆதரவற்ற இவர்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு துணையாக மாஸ்டர் இருந்து வருகிறார். இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்டுவதால் ஊரில் ஏற்படும் திருட்டுகளுக்காக இவர்கள் சந்தேக கேஸில் போலீசிடம் மாட்டுகிறார்கள். தினமும் போஸ்டர் ஒட்டிக்கொண்டு, குடித்துவிட்டு அடிக்கடி சந்தேக கேஸில் மாட்டுவதை விரும்பாத கதிர், வாழ்க்கையில் எதாவது செய்ய வேண்டும் என்றும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். தினமும் ஒயின் ஷாப்பில் தண்ணி அடிக்கும் இவர்கள் ஒரு நாள் விலையுயர்ந்த பாருக்கு செல்கிறார்கள். அங்கு குடித்துவிட்டு பணம் தரமுடியாத சூழ்நிலையில் இவர்களுக்கு நீளமுடி குமார் பண உதவி செய்கிறார்.

மறுநாள் நீளமுடி குமார் ஒரு கொலை செய்ய, அதை பார்க்கும் நண்பர்கள் மூவரும் போலீசிடம் மாற்றி கூறுகிறார்கள். இதிலிருந்து நீளமுடி குமாருக்கும், இவர்களுக்கு பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் நான் கூலிப்படை சேர்ந்தவன் என்றும், நீங்களும் என்னுடன் வந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறுகிறார். இதை நண்பர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஒருநாள் கதிர் இரவில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும்போது, நாயகி யாழினியை சந்திக்கிறார். யாழினிக்கு யாரும் இல்லாததை அறிந்த கதிர், தன்னுடன் அழைத்து சென்று அடைக்கலம் தருகிறார். தமிழ் தெரியாத யாழினி மீது நாளடைவில் கதிருக்கு காதல் வருகிறது. தன் காதலை யாழினியிடம் கூற, முதலில் மறுக்கும் யாழினி பின்னர் காதலை ஏற்று திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கதிர் வரும் நிலையில், யாழினி காணாமல் போகிறார். இதனால் மனமுடைந்து போகும் கதிர், வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடன் இருக்கும் மாஸ்டர் இறந்து விடுகிறார். இதனால் விரக்தியாகும் கதிர் என்ன ஆனார்? யாழினி யார்? யாழினியை கண்டுபிடித்தாரா? என்பதை சஸ்பென்ஸ் திரில்லராக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

படத்தில் கதிராக நடித்திருக்கும் விமல் ராஜ் காதல், சென்டிமென்ட், சோகம், நடனம் என அனைத்திலும் தன் நடிப்பை திறனை வெளிக்கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். நண்பர்களாக வரும் விஸ்வநாத், சுதிர் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யாழினியாக நடித்திருக்கும் ஆதிரா, படத்தில் பாதி நேரம் இந்தி மொழியிலேயே பேசியிருக்கிறார். நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் அழகாக வந்து செல்கிறார். பாவா லட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பணம், காதல், சூழ்நிலையால் இளைஞர்களின் வாழ்க்கை பாதை எப்படி மாறுகிறது என்பதை மையக்கருவாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.அண்ணாதுரை. முதற்பாதி காதல், சென்டிமென்ட் என்றும் பிற்பாதியில் சஸ்பென்ஸ், திரில்லராக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஐந்து கதாபாத்திரங்களை வைத்தே கதையை முடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் திருப்பம் நன்றாக இருந்தாலும், லாஜிக் மீறல்கள், தேவையற்ற காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்திற்கு எம்.எஸ்.அண்ணாதுரையே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளை ரசிக்க வைக்கிறது. பிரத்வய் சிவசங்கர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பிற்பாதியில் இவருடைய பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘கே 3’ ஓகே……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி