அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை… post thumbnail image
புதுடெல்லி:-அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் சாரில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால்-கீதா தேவி. கெஜ்ரிவால், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் மெக்கானிகல் என்ஜினீயரிங் கற்றுத்தேர்ந்தார். 1989-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். மத்திய பணியாளர் தேர்வாணைய (யு.பி.எஸ்.சி.) தேர்வுக்கு தயாராவதற்காக 1992-ம் ஆண்டு அப்பணியை ராஜினாமா செய்தார்.

யு.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஆனார். அரசுப்பணியில் இருந்து கொண்டே சமூக பணிகளிலும் ஆர்வமாக ஈடுபட்டார். தகவல் பெறும் உரிமை சட்டத்தை அடிமட்ட அளவில் அமல்படுத்துவதற்காக போராடினார். இதற்காக, அவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு புகழ்பெற்ற ‘ரமோன் மகசேசே’ விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டு பிப்ரவரி மாதம், தான் பார்த்து வந்த வருமான வரித்துறை இணை ஆணையர் பணியில் இருந்து விலகி, முழுநேர சமூக பணியில் ஈடுபடத் தொடங்கினார். ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். தனக்கு கிடைத்த ‘மகசேசே’ விருது பணத்தை தொண்டு நிறுவன நிதியில் சேர்த்தார். கடந்த 2011-ம் ஆண்டு, சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவில் சேர்ந்தார். ஜன லோக்பால் மசோதாவுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார்.

2012-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி, அன்னா ஹசாரே குழுவில் இருந்து விலகி, ‘ஆம் ஆத்மி’ கட்சியை தொடங்கினார். 2013-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்-மந்திரி ஆனார். ஆனால், 49 நாட்களிலேயே அப்பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, கடந்த 7-ந்தேதி நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர். வீட்டு சாப்பாடுக்குத்தான் முன்னுரிமை அளிப்பார். அவருடைய மனைவி சுனிதாவும் இந்திய வருவாய்த்துறை அதிகாரி ஆவார். இருவரும் ஒரே பேட்ச்சில் அதிகாரி ஆனவர்கள். இவர்களுக்கு ஹர்ஷிதா என்ற மகளும், புல்கிட் என்ற மகனும் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி