அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி வாகை சூடினாலும், டெல்லியில் பா.ஜ.க.வால் அத்தகைய வெற்றியை பெற முடியாது என்று தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஏற்கனவே கூறியிருந்ததற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் வெளிவர துவங்கியுள்ளன.

மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மோடியை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. அங்கெல்லாம் அமோக அறுவடை செய்தது. ஆனால் இம்முறை கெஜ்ரிவாலிடம் மோடி-அமித் ஷா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் காஷ்மீர் மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க., நாட்டின் தலைநகரில் தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளது. எப்படியாவது இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட மோடி-அமித் ஷா கூட்டணி, ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் கெஜ்ரிவாலோடு இணைந்து பங்கேற்ற கிரண் பேடியை அவருக்கு எதிராக களமிறக்கியது.
பேடியை முதல்வர் வேட்பாளராக அக்கட்சி முன்னிறுத்தியவுடன் டெல்லி மாநில பா.ஜ.க. தலைவர்களே சோர்ந்து போனார்கள். அம்மாநில வாக்காளர்களில் பெரும்பாலானோர் கெஜ்ரிவாலை வீழ்த்தவே கிரண் பேடியை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது என்பதை புரிந்துகொண்டனர். இதனால் வாக்காளர்கள் மத்தியில் கெஜ்ரிவாலின் செல்வாக்கு மேலும் உயரத்தொடங்கியது.

இதை உணர்ந்த அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் அடங்கிய பரிவாரங்களுடன் தானே நேரடியாக களமிறங்கினார். இருந்தும் பா.ஜ.க.வால் கெஜ்ரிவாலை அசைத்துப்பார்க்க முடியவில்லை. இதனால் மோடி-அமித் ஷா கூட்டணி நாட்டின் தலைநகருக்கான தேர்தலில், கெஜ்ரி-வால் என்ற சுவற்றில் மோதி கீழே விழ நேர்ந்துள்ளது. ஆக இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகிறார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த வெற்றிக்கு ஊடகத்துறையின் செயல்பாடு முக்கிய காரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. காலை 9.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 55 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க. வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி