செய்திகள்,திரையுலகம் ஷமிதாப் (2015) திரை விமர்சனம்…

ஷமிதாப் (2015) திரை விமர்சனம்…

ஷமிதாப் (2015) திரை விமர்சனம்… post thumbnail image
எப்படியாவது பாலிவுட்டில் நுழைந்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, பெரிய நடிகராக வேண்டும் என ஆசைப்படும் தனுஷ், தான் பிறந்த ஊரைவிட்டு மும்பைக்கு வருகிறார். அங்கே உதவி இயக்குனராக இருக்கும் அக்ஷராவின் நட்பு கிடைக்க, அவரிடம் தன் திறமையை வெளிப்படுத்துகிறார். தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தாலும், அவரால் பேச முடியாததால் அவருக்கு யாரும் சான்ஸ் தர மறுக்கிறார்கள். இந்நிலையில் தனுஷிற்கு ஆபரேஷன் மூலம் அட்வான்ஸ்டு சென்சார் ஒன்றை தொண்டையில் பொருத்தி, வேறொருவரின் குரல் ஒலியை உள்வாங்கி தனுஷ் தன் குரலாக மாற்றுகின்ற யுக்தியை டாக்டர்கள் மூலம் சாதிக்கிறார்கள்.

அதன்பிறகு தன் நடிப்புக்கேற்ற ஒவ்வொரு குரலாக தேடி அலையும் தனுஷ், ரோட்டில் குடித்துவிட்டு உளறிக் கொண்டிருக்கும் அமிதாப்பின் வாய்ஸை கேட்டு, அதை தன் குரலாக மாற்ற முடிவு செய்கிறார். பின்னர் தனுஷின் நடிப்பும், அமிதாப்பின் குரலும் இணைய ‘ஷமிதாப்’ என்ற நடிகர் உருவாகி முதல் படமே சூப்பர்ஹிட் ஆகிறது. வெற்றி இரண்டு பேருக்கும் போதையைத்தர அவர்களுக்குள் ‘ஈகோ’ மோதல் உருவாகிறது. ‘ஷமிதாப்’பின் வெற்றிக்கு நான்தான் காரணம் என இருவரும் மல்லுக்கட்ட இறுதியில் என்ன ஆகிறது என்பதே இப்படம். இப்படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ‘ஷமிதாப்’பின் டிரைலர் வெளிவந்தபோதே அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும், அதை முழுப்படமாக ரசிக்க ரசிகர்கள் எத்தனை ஆர்வமாக காத்திருந்தார்கள் என்பது தியேட்டரில் காட்சிக்கு காட்சி கிடைத்த கைதட்டல்களிலேயே தெரிந்தது. படத்தின் முதல் அரைமணி நேரத்திற்குப் பிறகே அமிதாப் என்ட்ரி ஆகிறார். அதுவரை தனுஷின் சேட்டைகளை ரசிக்கலாம். அமிதாப்பும், தனுஷும் இணைந்தபிறகு அவர்கள் இருவருக்கிடையேயும் நடக்கும் உரையாடல்கள் ஒவ்வொன்றுமே சுவாரஸ்யமாக பயணிக்கிறது.

முதல்பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம்பாதியில் படம் கொஞ்சம் க்ளிஷேவாக நகர்ந்ததையும் மறுக்க முடியாது. அதேபோல், தான் ஒரு வாய்பேச முடியாதவர் என்பதை என்னதான் வெளியுலகத்திற்கு தெரியாமல் தனுஷ் சமாளித்தாலும், அதில் ‘லாஜிக்’ காணாமல் போவதையும் மறுப்பதற்கில்லை. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்தான் என்றாலும், அதை அழகாக காட்சிப்படுத்திய பால்கியை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். படத்திற்கு முதுகெலும்பாக இருந்தது இளையராஜாவின் பின்னணி இசையும், பி.சி.யின் ஒளிப்பதிவும்தான். குறிப்பாக தனுஷ் பேச முடியாத இடங்களில் ராஜாவின் இசை ரசிகர்களிடம் பேசியது. அனுபவம் சேரச் சேர நடிப்பு எந்தளவுக்கு மெருகேறும் என்பதற்கு அமிதாப்தான் சரியான உதாரணம். எத்தனை பெரிய சூப்பர்ஸ்டார்… இதுபோன்ற ஒரு கேரக்டரை அசாத்தியமாக ஊதித் தள்ளுகிறாரே என்ற பிரமிப்பு காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அமிதாப் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமல்ல, அவர் தனுஷிற்கு குரல் கொடுக்கும் காட்சிகளிலும் அமிதாப் பச்சன்தான் நம் கண்களுக்கு புலப்பட்டார். காரணம்… அவரின் கம்பீரக் குரல் ரசிகர்களிடம் இத்தனை ஆண்டுகளாக ஏற்படுத்திய தாக்கம்!

மசாலா படங்கள் என்றாலே தனுஷின் நடிப்பை சிலாக்கிலாம்… இதில் ‘நடிகர்’ கேரக்டர் என்றால் சொல்லவும் வேண்டுமா…? அமிதாப்பிற்கு இணையாக தனுஷிற்கும் வரவேற்பு கிடைத்தது என்றாலே அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு எத்தனை உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்பது புரியும். பாதி முகத்தை மறைக்கும் முன் வந்து விழும் தலைமுடி, துறு துறு பூனைக் கண்கள், பளிச் பாடி லாங்குவேஜ், அழகான சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் என அக்ஷராவின் அறிமுகம் அசத்தலாக அமைந்துள்ளது. நிச்சயம் பல உயரங்களைத் தொடுவார்.

மொத்தத்தில் ‘ஷமிதாப்’ ஆட்டம்………….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி