செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் 25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…

25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…

25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!… post thumbnail image
புதுடெல்லி:-பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. ஆனால் அது போதாது எனக்கூறி கடந்த மாதம் 7ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்தனர்.

ஆனால் அதே நாளில், வங்கி நிர்வாகங்கள் 11 சதவீதம் என்பதை 12.5 சதவீத அளவுக்கு உயர்த்தித்தர முன்வந்ததால், வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தனர். இதேபோன்று கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கி 4 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்ததையும் ஒத்திவைத்தனர். இப்போது மேலும் அரை சதவீதம் உயர்த்தி 13 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் நேற்று முன்வந்தன. ஆனால் இதை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஏற்கவில்லை. நிராகரித்து விட்டனர். இதுதொடர்பாக வங்கி சங்கங்களின் ஐக்கிய பேரவை அமைப்பாளர் எம்.வி. முரளி, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர், இந்திய வங்கியாளர்கள் சங்கம் 12.5 சதவீத சம்பள உயர்வை அரை சதவீதம் அதிகரித்து 13 சதவீதமாக வழங்குவதாக கூறி உள்ளது. இதை நாங்கள் ஏற்கமாட்டோம் என கூறினார்.

இதையடுத்து வரும் 25ம் தேதி தொடங்கி 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதை வங்கி பணியாளர்கள் தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் அஷ்வினி ரானா அறிவித்தார். வருகிற 23ம் தேதி பட்ஜெட் தொடருக்காக பாராளுமன்றம் கூட உள்ளது. இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அது அரசின் நிதி பரிமாற்றங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கிடையே அனைத்திந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், ஏற்ற வகையில் ஊதிய உயர்வு அமையாவிட்டால், அடுத்த மாதம் 16ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை என கூறினார்.
நாட்டில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அவற்றின் 50 ஆயிரம் கிளைகளில் ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிப்பணிகளும் முடங்கிப்போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி