அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:- 15 ஆண்டுகள் டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ் அதை வீணடித்து விட்டது. பின்பு தற்காலிகமாக இன்னொரு புதிய சிறிய கட்சி(ஆம் ஆத்மி) ஒரு வருடம் டெல்லியை வீணாக்கியது. கடந்த 16 ஆண்டு காலமாக உள்ள இந்த பிரச்சினையில் இருந்து டெல்லியை மீட்கவேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கும், எனக்கும் உள்ளது.

தாயும்-மகனும்(சோனியா -ராகுல்) பேசுவதை இன்று யாராவது கவனிக்கிறார்களா? அவர்களுடைய பேச்சையோ, அவர்களையோ யாரும் கவனிப்பதில்லை. கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை குறித்து அவர்கள்(ஆம் ஆத்மி) நாங்கள் யாரிடமும் எதையும் கேட்கவில்லை என்றார்கள். இப்போது யாரோ எங்களுடைய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விட்டனர் என்கிறார்கள். அப்படி செலுத்தியவர்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியாது என்றும் சொல்கின்றனர்.இவர்கள்(ஆம் ஆத்மி) எங்களைப் போல் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவர்களின் வங்கி கணக்கில் வெளிநாட்டு பணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஒரே நாள் இரவில். கருப்பு பணம் பற்றி மக்கள் பேசுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒரே நாள் இரவில் தவறான முறையில் பணம் போடப்பட்டது குறித்து முதல் முறையாக இப்போதுதான் நாம் கேள்விப்படுகிறோம். இதை விட மிகப்பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை.

நாட்டு மக்கள் எப்போதும் தவறுகளை மன்னிப்பார்கள். ஆனால் நேர்மையற்ற செயலை மன்னிக்கவே மாட்டார்கள். அவர்கள் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விட்டார்கள். இப்படி நேர்மை அற்றவர்களாலும், பொய் சொல்கிறவர்களாலும் டெல்லியில் ஆட்சி நடத்த இயலுமா?… டெல்லியில் பா.ஜனதா ஆட்சி அமைத்தால் டெல்லியை சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகரமாக மாற்றும்.

டெல்லியில் நிலையான ஆட்சி அமைந்தால் அது எனக்கு நேரத்தை மிச்சப்படுத்தும். இதன் மூலம் நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கு செலவிட எனக்கு நேரம் கிடைக்கும். டெல்லியில் ஏதாவது தவறுதலாக நடந்தால், எனக்கு இரண்டு விதமான வேலைப்பளு வந்துவிடும். எனவே கிரண்பேடி தலைமையிலான பா.ஜனதா அரசு டெல்லியில் அமைய மக்கள் வாக்களிக்கவேண்டும்.நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது, மக்களின் நலனுக்காகத்தான். இந்த அவசர சட்டம் பற்றி காங்கிரசார் இரவும், பகலுமாக கோஷமிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.சாலை வசதி, மருத்துவனை வசதி, தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு போன்றவற்றை மக்கள் பெறுவதற்காகத்தான் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி