புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தனக்கு முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி அட்டை வழங்கப்படவில்லை என்று கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் புகார் கூறியிருந்தார். அதை கேலி செய்யும் வகையில் இந்த விளம்பரம் அமைந்து இருக்கிறது. இதற்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–
பா.ஜனதா ஒவ்வொரு முறையும் எல்லை மீறி நடந்து கொள்கிறது. முதலில் என் குழந்தைகளை குறை கூறினார்கள். நான் அமைதியாக இருந்தேன். இப்போது என்னையும் அகர்வால் சமூகத்தையும் இழிவு படுத்தும் வகையில் விளம்பரம் செய்துள்ளனர். பா.ஜனதா தனது எல்லையை தாண்டக் கூடாது என்று அன்னா ஹசாரே கூட கண்டித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள விளம்பரம் மூலம் அனைத்து விதிகளையும் எல்லையையும் பா.ஜனதா மீறிவிட்டதையே காட்டுகிறது. எனவே பா.ஜனதா இன்னும் 2 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி