செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 6500 விமான சேவைகள் ரத்து!…

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 6500 விமான சேவைகள் ரத்து!…

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 6500 விமான சேவைகள் ரத்து!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் மாகாண நகரங்கள் குளிர்புயலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. வடகிழக்கு பகுதியில் பனிப்புயல், இதுவரை வரலாறு கண்டிராத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. பல இடங்களில் பனிப்புயல் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இருக்கும். மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பல இடங்களில் பனிப்பொழிவு 15 அங்குல அளவுக்கு இருக்கும்.

கடலோரப்பகுதிகளான கேப் காட், லாங் தீவு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டனிலும் இதே நிலைதான் என கூறப்படுகிறது.நியூயார்க் நகரில் நேற்று அவசர கால வாகனங்கள் தவிர்த்து பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நியூயார்க், பாஸ்டன், மசாசூசெட்ஸ் பகுதிகளில் சுரங்க ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்க ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. பயண தடை காரணமாக நகரங்கள் முடங்கின. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. சகஜ வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நியூயார்க், நியூஜெர்சி, கனெக்டிகட், ரோட் தீவு, மசாசூசெட்ஸ், நியூஹம்ப்ஷயர் மாகாணங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டன் நகரில் மிகக்கடுமையான அளவில் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. அங்கு பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 6,500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மசாசூசெட்ஸ் கவர்னர், இந்தப் பனிப்புயல் இதுவரை கண்ட மோசமான 5 புயல்களில் ஒன்றாக இருக்கும் என கூறி உள்ளார். நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ, மாகாணத்தின் 13 நகரங்களில் யாரும் கண்டிப்பாக பயண தடையை மீறக்கூடாது என எச்சரித்திருக்கிறார். இதே போன்று நியூயார்க் மேயர் பில், இந்தப் புயலை தவறாக கருதி விடாதீர்கள் என எச்சரித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி