செய்திகள்,விளையாட்டு 4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…

4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!…

4–வது டெஸ்ட் டிரா: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!… post thumbnail image
சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 475 ரன் குவித்தது. 97 ரன்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய 4–வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன் எடுத்து இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா 348 ரன்னில் முன்னிலையில் இருந்தது. இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடாமல் அதே ரன்னில் ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் 90 ஓவர்களில் இந்தியாவுக்கு 349 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முரளி விஜய்யும், ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த ராகுல் 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். லயன் பந்தில் வார்னரிடம் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 48 ஆக இருந்தது.
2–வது விக்கெட்டுக்கு முரளி விஜய்யுடன் ரோகித்சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 73 ரன் எடுத்து இருந்தது. சிறப்பாக ஆடி வந்த ரோகித்சர்மா 39 ரன்னில் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரது கேட்சை சுமித் அபாரமாக பிடித்தார். 90 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 104 ஆக இருந்தது.

அடுத்து கேப்டன் வீராட்கோலி களம் வந்தார். மறுமுனையில் இருந்த முரளிவிஜய் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 135 பந்தில் 50 ரன்னை (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். இந்த தொடரில் அவர் அடித்த 4–வது அரை சதம் ஆகும். 31–வது டெஸ்டில் விளையாடும் அவர் இன்று 10–வது அரை சதத்தை பதிவு செய்தார். தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடி பிரிந்தது. சிறப்பாக ஆடி வந்த முரளிவிஜய் 80 ரன்னில் அவுட் ஆனார். 165 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். சிறிது நேரத்தில் கோலி 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 201 ஆக இருந்தது. அதை தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. ரெய்னா (0), விர்த்திமான் சகா (0), அஸ்வின் (1) ஆட்டம் இழந்தனர். 217 ரன்னில் 7 விக்கெட்டை இழந்ததால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது 11.4 ஓவர் எஞ்சி இருந்தது.ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த ரகானே பொறுப்புடன் விளையாடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். அவருக்கு புவனேஸ்வர்குமார் உதவியாக இருந்தார். இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது.

ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 89.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்தது. ரகானே 88 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 38 ரன்னும், புவனேஸ்வர்குமார் 30 பந்தில் 20 ரன்னும் (அவுட்இல்லை) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிட்னி டெஸ்ட் ‘டிரா’ ஆனதன் மூலம் ஆஸ்திரேலியா 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் மற்றும் 2–வது டெஸ்டில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. 3–வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. சிட்னி போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தட்டிச்சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி