அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…

அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…

அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?… post thumbnail image
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன. ராணுவத்தால் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தமிழர்கள் வீடு வாசல்களை இழந்து அனாதைகள் போல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணித்ததால் சிங்களர்களின் ஆதரவுடன் ராஜபக்சே எளிதில் வெற்றி பெற்று மீண்டும் அதிபர் நாற்காலியில் அமர்ந்தார்.
ஆனால் அந்த தவறை தமிழர்கள் இந்த முறை செய்யவில்லை. இந்த தேர்தலில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகம் வசிக்கும் தமிழர்கள் ராஜபக்சேவுக்கு தங்கள் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவித்தார்கள். வாக்குச்சாவடிக்கு திரளாக சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இது அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதேபோல் கடந்த ஆண்டில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடைபெற்றது. அதை கட்டுப்படுத்த அதிபர் ராஜபக்சே தவறிவிட்டதாக முஸ்லிம் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது. அவர்கள் தங்கள் அதிருப்தியை இந்த தேர்தலில் காட்டி உள்ளனர்.

மேலும் ராஜபக்சேயின் சர்வாதிகார போக்கும், குடும்ப அரசியலும் அவர் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராஜபக்சேயின் ஒரு தம்பி கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாகவும், மற்றொரு தம்பி பசில் ராஜபக்சே பொருளாதார துறை மந்திரியாகவும் இருந்தனர். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகளிடம் மட்டுமின்றி ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் ராஜபக்சே அரசில் இருந்து சிறிசேனா உள்பட சில மந்திரிகளும், கட்சியில் இருந்து சில எம்.பி.க்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.ராஜபக்சேயின் ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், பல அடிப்படை கட்டுமான திட்டங்களில் பெருமளவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டியது. மேற்கண்ட காரணங்களால் ராஜபக்சே தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி