செய்திகள் 95 கிலோ கெளுத்தி மீனை பிடித்த 14 வயது சிறுவன்!…

95 கிலோ கெளுத்தி மீனை பிடித்த 14 வயது சிறுவன்!…

95 கிலோ கெளுத்தி மீனை பிடித்த 14 வயது சிறுவன்!… post thumbnail image
எப்ரோ:-ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம், மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன் தந்தை பீட்டருடன் காட்டலோனியாவில் உள்ள எப்ரோ ஆற்றில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற சாம், 95 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கெளுத்தி மீனோடு கரைக்குத் திரும்பினான். சாமின் இந்த சாகசச் செயலை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இந்த பெருமை அவ்வளவு எளிதாக ஒன்றும் சாமுக்கு கிடைத்து விடவில்லை. சாம் தன்னை வேட்டையாட வந்திருப்பதை அறிந்து உஷாரான மீன் 100 மீட்டர் ஆழத்திற்கு உள்ளே போய்விட்டது. 35 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னரே எட்டடி நீளமுள்ள புலால் உண்ணும் இந்த பெரிய கெளுத்தி சாமுக்கு கிடைத்தது. அதைப் பிடித்ததைவிட தன் சிறிய படகில் அதை ஏற்ற முடியாததால் அதை தன் படகோடு சேர்ந்து நீந்தி வருமாறு செய்து புத்திசாலித்தனமாக அதைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தற்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்தனர்.

இதற்காக, பாரம்பரிய முறையில் கௌரவிக்கப்பட்ட சாம், தன்னுடைய தனிப்பட்ட சாதனைக்காக அந்த மீனோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் அதை ஆற்றிலேயே விட்டு விட்டான். எப்ரோவில் பிரம்மாண்டமான கெளுத்தி மீனுக்கான தேடலில் சாமுக்கு இது மூன்றாவது பயணம் என்பதும், சென்ற வருட விடுமுறையில் 60 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி