செய்திகள்,திரையுலகம் வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்…

வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்…

வெள்ளக்காரதுரை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
சூரி வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் அவருடைய மாமா வீட்டில் அவருக்கு மரியாதையே இல்லை. ஆகையால், தனது சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ஜான் விஜய்யிடம் ரூ.15 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி, புரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு நிலத்தை வாங்கி அதை பிளாட் போட்டு விற்பனை செய்ய திட்டம் தீட்டுகிறார். இவருடைய இந்த தொழிலுக்கு சூரியின் நண்பரான விக்ரம் பிரபுவும் உதவியாக இருக்கிறார். ஒருநாள் இவர்களுடைய நிலத்தை வாங்க பெரிய தொழிலதிபரான மதன்பாப் வருகிறார். அவரிடம், பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து, அக்ரிமெண்ட் போடும் சமயத்தில், அந்த நிலத்திற்குள் சிலர் பிணத்தை கொண்டுவந்து அடக்கம் செய்கின்றனர்.

அப்போதுதான் சூரிக்கும், விக்ரம் பிரபுவுக்கும் தெரிகிறது அது ஒரு சுடுகாடு என்று. இதனால், மதன்பாப் அந்த நிலத்தை வாங்காமல் திரும்பி சென்றுவிடுகிறார். புரோக்கர் வையாபுரியால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சோகமடையும் விக்ரம் பிரபுவும் சூரியும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார்கள்.போதை உச்சிக்கு சென்று மயங்கி கிடக்கையில், இவர்களை ஜான் விஜய்யின் ஆட்கள் தூக்கிக் கொண்டு அவர்கள் இடத்துக்கு செல்கிறார்கள். ஜான் விஜய் தன்னிடம் வட்டிக்கு வாங்கிவிட்டு, பணத்தை திருப்பி செலுத்த முடியாதவர்களை அடிமையாக நடத்தி வருகிறார். அதேபோல், இவர்களையும் அடிமைபோல் நடித்த முடிவெடுக்கிறார்.இந்நிலையில், ஜான் விஜய்யை கொல்ல ஒரு மர்மக் கும்பல் வருகிறது. அவர்களிடமிருந்து ஜான் விஜய்யை விக்ரம் பிரபு காப்பாற்றுகிறார். இதனால், விக்ரம் பிரபு மீது ஜான் விஜய்யுக்கு நல்ல மரியாதை வருகிறது. இதையடுத்து விக்ரம் பிரபுவுக்கு மட்டும் அடிமைகளை மேற்பார்வையிடும் பணியை கொடுக்கிறார் ஜான் விஜய்.

ஜான் விஜய் இடத்தில், நண்பர்களுடன் கலாட்டா செய்து சுற்றி வரும் விக்ரம் பிரபு ஒருநாள் அங்கு நாயகி ஸ்ரீதிவ்யாவை பார்க்கிறார். அவளைப் பார்த்ததும் அவள்மீது காதலில் விழுந்து விடுகிறார்.சூரியிடம் அவள் யார் என்று விக்ரம் பிரபு கேட்க, சூரியும், அவள் ஜான் விஜய்யின் தங்கை என்று சொல்லி வைக்கிறார். ஸ்ரீதிவ்யாவும் தன்னுடன் ஜாலியாக பழகும் விக்ரம் பிரபுவை காதலிக்க தொடங்குகிறாள். இருவரும் காதலித்து வருகிறார்கள்.இந்நிலையில், ஜான் விஜய்க்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. சூரிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இவர்களும் ரொம்ப ஜாலியாக இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமணத்தன்று மணமகள் கோலத்தில் இருப்பவளை பார்த்து விக்ரம் பிரபு அதிர்ச்சியடைகிறார். அவள் யாரென்றால், இவர் காதலிக்கும் ஸ்ரீதிவ்யாதான் மணக்கோலத்தில் இருக்கிறாள்.அவள் ஜான் விஜய்க்கு தங்கையும் இல்லை, முறைப்பெண்ணும் இல்லை. தன்னைப் போல் வட்டிக்கு பணம் வாங்கி பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ஜான் விஜய்யிடம் அடிமையாக மாட்டிக் கொண்டவள் என்று அப்போதுதான் விக்ரம் பிரபுவுக்கு தெரிய வருகிறது.இதையடுத்து, ஜான் விஜய்யிடம் இருந்து ஸ்ரீதிவ்யாவை விக்ரம் பிரபு காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விக்ரம் பிரபு முதன்முதலாக ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கிறார். அவருக்கு காமெடி நன்றாகவே வருகிறது. நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடிக்கும் காட்சிகளிலும் இவரது நடிப்பு பலே.சூரி வழக்கம்போல் படத்தை தனது காமெடியால் தாங்கி நிற்கிறார். ஸ்ரீதிவ்யாவுக்கு கிராமத்து பெண் வேடம் என்றால் வெளுத்துக் கட்டுவார். அந்த வகையில் இந்த படத்திலும் தனது அழகான நடிப்பால் அனைவரையும் அசத்துகிறார். சிறு சிறு முகபாவணைகளால் நம்மை வெகுவாக கவர்கிறார். அதிரடி வில்லனாக வரும் ஜான் விஜய் வில்லத்தனத்தில் மிரட்டினாலும், காமெடியிலும் கலக்குகிறார்.எழில் தன்னுடைய வழக்கமான காமெடி மசாலவையே இந்த படத்திலும் தூவியிருக்கிறார். இது அவருக்கு கச்சிதமாகவே வந்திருக்கிறது. கதைக்கு தகுந்தாற்போல் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும்படியான படமாக கொடுத்த இவருக்கு நமது பாராட்டுக்கள். டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ‘அம்மாடி உன் அழகு’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு, கிராமத்தின் பசுமையை அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘வெள்ளக்காரத்துரை’ காமெடி காதல்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி