அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!…

நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!…

நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!… post thumbnail image
புதுடெல்லி:-நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராகுல் காந்தியையும் சந்தித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர ஊர் ஊராகச்சென்று பிரசாரம் செய்வேன் என்று அறிவித்துள்ள குஷ்பு விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதன் முதலாக பேசினார். இதையடுத்து காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். குஷ்பு தமிழக மக்களுக்கு நன்றாக அறிமுகம் ஆன பிரபல நடிகை. எனவே, குஷ்பு பேசும் கூட்டங்களுக்கு ஏராளமானோர் வருகிறார்கள். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

எங்கள் குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் உடையது. காங்கிரசில் சேர்வது தான் எனது கனவு அது நிறைவேறி விட்டது என்று குஷ்பு கூறிவருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த தமிழ்நாட்டு மருமகளான குஷ்புவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் மேலிடத்தையும் கவர்ந்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை சரளமாக பேசும் குஷ்புவை டி.வி. சேனல்களில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்க செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு ராகுல் காந்தியும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, குஷ்புவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே குஷ்பு காங்கிரஸ் சார்பில் டெல்லி–மேல் சபை எம்.பி. ஆவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து அவரை மேல்–சபை எம்.பி.ஆக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து மேல்–சபை எம்.பிக்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்பட்டு மேல்–சபை எம்.பி. ஆவார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி