செய்திகள்,திரையுலகம் பிசாசு (2014) திரை விமர்சனம்…

பிசாசு (2014) திரை விமர்சனம்…

பிசாசு (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் நாகா ஒரு வயலின் இசை கலைஞர். இவர் சினிமாவில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை செய்து வருகிறார். ஒருநாள் நாகா காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு விபத்தை பார்க்கிறார். அந்த விபத்தை நாகா நேரில் சென்று பார்க்கும்போது நாயகி பிரயாகா ரத்த வெள்ளத்தில் அடிப்பட்டு கிடக்கிறாள். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் நாகா. மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பாகவே பிரயாகா நாகாவின் கையை பிடித்து கொண்டே இறந்து விடுகிறாள். பிரயாகாவை காப்பாற்ற முடியவில்லை என்று வருந்துகிறார் நாகா. இதிலிருந்து விடுபடுவதற்காக நண்பனின் அறிவுரைப்படி வீட்டிற்கு மது வாங்கி செல்கிறார். அப்போது இவரை குடிக்க விடாமல் திடீர் என்று மதுபாட்டில்கள் எல்லாம் தானாக உடைகின்றன. வீட்டினுள் தன்னை தவிர வேரு யாரோ இருப்பதை நாகா அறிந்து கொள்கிறான்.

பின்னர் தன் நண்பரை தன்னுடன் துணைக்கு வைத்துக் கொள்கிறான். ஆனால் வீட்டினுள் இருக்கும் பிசாசு நண்பரை பயமுறுத்துகிறது. இதனால் வீட்டினுள் இருக்கும் பிசாசுவை விரட்ட போலி பூசாரியை அழைத்து வருகிறார்கள். இந்த பூசாரி நாகாவிடம் இருந்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார். அவர்களையும் பிசாசு தாக்குகிறது. அது இறந்து போன பிரயாகாவின் ஆவி என்று தெரிந்துக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் இந்த பிசாசுக்கு பயந்து வீட்டின் மாடியில் தங்குகிறார்கள்.இந்நிலையில் நாகாவின் அம்மா ஊரில் இருந்து வருகிறார். வீட்டில் இருக்காதீர்கள் ஆவி இருக்கிறது என்று அம்மாவிடம் நாகா கூறுகிறான். இதை அவர் ஏற்க மறுக்கிறார்.ஒருநாள் நாகாவின் அம்மா பாத்ரூமில் அடிப்பட்டு கிடக்கிறார். அவரை பிசாசு அழைத்துச் சென்று பக்கத்து வீட்டின் முன் போட்டு விடுகிறது. இதனால், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் மருத்துவமனையில் சேர்ந்து உயிர்பிழைக்கிறார். இதை நாகா தவறாக புரிந்துக் கொண்டு பிசாசுதான் தன் அம்மாவை தாக்கி விட்டது என்று நினைக்கிறான். இதனால் அந்த பிசாசுவை விரட்ட முயற்சி செய்கிறான். மேலும், பிரயாகாவின் அப்பாவான ராதாரவியை தேடிக் கண்டுபிடித்து பிசாசுவை விரட்ட வைக்கிறான். ராதாரவியோ பிசாசுவை அழைத்து பார்க்கிறார். பிசாசு செல்ல மறுக்கிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து நாகாவின் அம்மா போன் செய்து, வீட்டில் பிசாசு இருப்பது உண்மைதான். ஆனால் அந்த பிசாசுதான் என்னை காப்பாற்றியது என்று புரிய வைக்கிறார். இதனால் பிசாசு விரட்டுவதை கைவிடுகிறார். பிரயாகா பிசாசு தனக்கு தீங்கு செய்ய வரவில்லை என்றும் நன்மை செய்யத்தான் வந்திருக்கிறது என்று உணர்வதுடன், பிரயாகா இறப்பதற்கு காரணமானவனை பழி வாங்கவும் நினைக்கிறார் நாகா.இறுதியில் பிரயாகாவை கார் ஏற்றி கொன்றது யார்? அவரை நாகா பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நாகா, படம் முழுவதும் முகத்தை முடியால் மூடிய படியே நடித்திருக்கிறார். அவ்வப்போது தெரியும் கண்களில் ஆயிரம் அர்த்தங்களை கொண்டு நடித்திருக்கிறார். பிசாசுவால் பயந்து அலறும்போதும் நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார். நாயகி பிரயாகா அழகாக இருக்கிறார். ஆனால் காட்சிகள் குறைவு. பிசாசாகவே அதிக காட்சிகளில் வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் ராதாரவி சிறப்பான நடிப்பால் மனதில் நிற்கிறார்.

இயக்குனர் மிஷ்கின் வழக்கம் போல் தன் படங்களுக்குண்டான வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி பிசாசுடனும் இரண்டாம் பாதி நாயகி இறந்ததற்கான காரணத்தையும் தேடும் வகையில் அமைத்திருக்கிறார். இறந்தவர்கள் பிசாசு இல்லை, உயிருடன் இருக்கும் மனிதர்களில் பழிவாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் தான் பிசாசு என்ற கருத்தை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாக சொல்லியிருக்கிறார். மிஷ்கின் படங்களில் வரும் வித்தியாசமான ஒளிப்பதிவை இப்படத்திலும் பார்க்கலாம். அதை ஒளிப்பதிவாளர் ரவி ராய் சிறப்பாக செய்திருக்கிறார். அரோலின் இசையில் ‘போகும் பாதை…’ பாடல் மனதில் பதிகிறது. பின்னணி இசையிலும் அதிக கவனம் ஈர்த்திருக்கிறார். படத்திற்கு கூடுதல் பலமாக பின்னணி இசையில் பேய் படங்களுக்கு உண்டான இசையை கொடுத்திருக்கிறார். எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங் உள்ளிட்ட வேலைகளும் படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றன.

மொத்தத்தில் ‘பிசாசு’ பயம்…………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி