அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் நேதாஜி உயிருடன் உள்ளார்: நேரில் ஆஜர்படுத்த தயார்!… ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்…

நேதாஜி உயிருடன் உள்ளார்: நேரில் ஆஜர்படுத்த தயார்!… ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்…

நேதாஜி உயிருடன் உள்ளார்: நேரில் ஆஜர்படுத்த தயார்!… ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்… post thumbnail image
மதுரை:-மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முக்கியமானவர். அவரது மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடிக்கிறது. அவரது மரணம் குறித்த மர்மத்தை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், மனு குறித்து மத்திய கேபினட் செயலாளர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி, பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆ.அழகுமீனா சார்பில் முந்தைய மனுவிற்கு ஆதரவாக மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 1962ம் ஆண்டு நடந்த சீன போர் மற்றும் 64ம் ஆண்டில் நேரு இறுதி ஊர்வலம் ஆகியவற்றில் நேதாஜி இருந்துள்ளார். நேதாஜி இறந்துவிட்டதாக அறிவிக்க கூடாது என 4.8. 1997ல் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பி வரும் போது போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. நேதாஜி ஒரு போர் குற்றவாளி எனவும், அவர் கண்டுபிடிக்கப்பட்டால் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் நேரு ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நேதாஜி ஒரு பிரம்மச்சாரி. அவருக்கு குழந்தைகள் கிடையாது. நேதாஜியின் வாரிசு என கூறப்படும் அனிதா போஸ் இந்திய தேசிய காங்கிரசால் உருவாக்கப்பட்டவர். எனவே அவர் டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாரா?…

மேற்கு வங்கத்தில் உள்ள சவுல்மாரி ஆசிரமத்தில் நேதாஜி சாதுவாக இருக்கிறார் என்ற தகவலையடுத்து 1963, 1964ம் ஆண்டுகளில் மத்திய அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டுள்ளார். நேதாஜியை பலமுறை சந்தித்துள்ளதாக முத்துராமலிங்கத் தேவர் கூறியுள்ளார். தற்போதும் அவர் உயிருடன் உள்ளார். நேதாஜியை போர் குற்றவாளியாக அறிவித்து ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்க மாட்டோம் என மத்திய அரசு உறுதி அளித்தால், பாரதிய சுபாஷ் சேனா அமைப்பின் தலைவர் அரவிந்த் பிரதாப் சிங் அனுமதியுடன் ஐகோர்ட்டில் நேதாஜியை ஆஜர்படுத்த தயாராக உள்ளோம். நீதிமன்றத்தில் அதற்குரிய ஆதாரங்களை தாக்கல் செய்யவும் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜன. 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி