செய்திகள்,திரையுலகம் மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்…

மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்…

மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் வீரா நெடுஞ்சாலையில் செல்லும் வண்டிகளில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து வருகிறார். அப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை ஊரின் பெரிய ஆளான ஜோமல்லூரியிடம் கொடுத்து பணம் சம்பாதித்து பிழப்பை நடத்தி வருகிறார். மேலும் பணத்திற்காக மற்றவர்கள் சொல்லும் வேலையையும் செய்து வருகிறார். ஆதரவற்ற வீரா சிறு வயதில் இருந்தே திருட்டு பொருட்களை ஜோமல்லூரியிடம் தருவதால் அவரை மாமா என்று அழைத்து வருகிறார். ஜோமல்லூரியின் மகளான நாயகி மகிமா கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் மகிமாவுக்கு காதல் கடிதம் எழுதி வீரா மூலம் கொடுத்து அனுப்புகிறான். இதற்காக வீராவுக்கு பணமும் கொடுக்கிறான்.

ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட வீரா, ஜோமல்லூரியிடம் போட்டு கொடுத்து விடுகிறார். இதிலிருந்து மகிமாவிடம் பழக ஆரம்பிக்கிறார் வீரா. இந்தப் பழக்கத்தால் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.
இதற்கிடையில் ஜோமல்லூரிக்கும் அந்த ஊரின் போலீஸ் அதிகாரிக்கும் பகை ஏற்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நெடுஞ்சாலையில் சென்ற ஒரு வாகனத்தில் இருந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை வீரா திருடுகிறான். அந்தப் பொருளையும் வழக்கம்போல் ஜோமல்லூரியிடம் கொடுக்க, அவர் பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்புகிறார். பின்னர், அந்தப் பொருளை வீட்டில் வைத்தால் ஆபத்து என்று நினைத்த ஜோமல்லூரி, மதுரைக்கு அந்த பொருளை எடுத்து செல்கிறார். பொருட்களை பறிகொடுத்தவர்கள் போலீசில் புகார் அளிக்கிறார்கள். போலீஸ் ஜோமல்லூரியின் வீட்டிற்கு சென்று திருட்டு பொருளை தேடுகின்றனர். பொருளும் ஜோமல்லூரியும் இல்லாததால் மகிமாவை போலீஸ் அழைத்து செல்கிறது. வீட்டில் மகிமாவை அழைத்து வரும் போலீசை வீரா தடுத்து நிறுத்தி நான் தான் பொருளை திருடினேன் என்று கூறி மாட்டிக் கொள்கிறார். இதனால் போலீஸ் மகிமாவை விட்டு வீராவை அழைத்துச் செல்கிறது.

இதனால் ஜோமல்லூரி அவமானத்தில் வருந்தும் அதேசமயம், வீட்டிலும் பிரச்சனை ஏற்படுகிறது. திருட்டு பொருட்களை வாங்குவதை விட்டுவிடுங்கள் என்றும், வீராவுடன் பழகுவதை நிறுத்துங்கள் என்றும் கூறி ஜோமல்லூரியின் மனைவி சத்தியம் வாங்குகிறார். போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீரா, நேராக ஜோமல்லூரியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஜோமல்லூரி இனிமேல் உனக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறுகிறார். இதற்கு வீரா, நீ சம்பாதித்த பணம் எல்லாம் நான் திருடி கொடுத்த பொருட்களால் வந்தது என்றும், உன் வீடு, சொத்துக்களில் எல்லாம் என் உயிர் இருக்கிறது என்றும் கூறுகிறார். இதற்கு மகிமா, ‘சொத்துக்களில் எல்லாம் உயிர் இல்லை. இந்த வீட்டின் உயிர் நான்தான் என்னை எடுத்துக்கொள்’ என்று அனைவரின் மத்தியில் கூறுகிறார். இதனால் ஜோமல்லூரி கோபமடைகிறார். இதனால், தன் ஆளை அனுப்பி வீராவின் வயிற்றில் கத்தியால் குத்த வைக்கிறார். கத்திக் குத்து பட்ட வீரா பிழைத்தானா? அவரது காதல் ஜெயித்ததா? என்பதே மீதிக்கதை. படத்தில் மொசக்குட்டி என்னும் கதாபாத்திரத்தில் வீரா நடித்திருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் சிறப்பாகவும், சில இடங்களில் கொஞ்சம் அதிகபடியான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் நடிப்பில் மற்ற நடிகரின் சாயலும் தெரிகிறது.

நாயகியாக நடித்திருக்கும் மகிமா சிறப்பாக நடித்திருக்கிறார். காதலனுக்காக ஏங்கும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. அழகாக வந்து அளவாக நடித்திருக்கிறார். படம் முழுக்க வீராவுடன் வலம் வருகிறார் செண்ட்ராயன். ஒரு சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.ஜோமல்லூரி, விருமாண்டி என்னும் கதாபாத்திரத்தில் மிடுக்கான நடிப்பால் மிளிர்கிறார். இடைவேளைக்குப்பின் வரும் பசுபதியின் நடிப்பு அருமை. இவருடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை இன்னும் மிரட்டியிருக்கலாம்.
வழக்கமான காதல் கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ஜீவன். மரத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும்படி காட்சியமைத்திருக்கிறார். இது பெரிதும் எடுபடவில்லை என்றே சொல்லலாம். சில இடங்களில் லாஜிக் மீறிய காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.
ரமேஷ் விநாயகம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சுகுமாரின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளிலும் கேரளாவின் மலைப்பகுதிகளையும் அழகாக படம் பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மொசக்குட்டி’ காதல்…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி