செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..!

காவியத்தலைவன் (2014) திரை விமர்சனம்..! post thumbnail image
புகழ்பெற்ற மேடை நாடகக் கலைஞரான சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் (நாசர்) நடிப்பு பயில சிறுவயதிலேயே வந்து சேர்கிறார் கோமதி நாயகம் (ப்ரித்விராஜ்). பின்னர் ரயில் பயணம் ஒன்றில் பிச்சையெடுக்கும் சிறுவன் காளியப்பாவின் (சித்தார்த்) பாடல்களைக் கேட்டு, அவனையும் தன் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்கிறார். இருவரும் திறமையான நடிகர்களாக வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பஞ்சம் பிழைக்க வழியில்லாத வடிவாம்பாளும் (வேதிகா) அவர்களோடு வந்திணைகிறார்.

இவர்களுடைக்கிடையே நடக்கும் உணர்ச்சிமிகுந்த காவியம்தான் ‘காவியத்தலைவன்’.புகழ் வெறியும், பொறாமை குணமும் கொண்ட ஒரு திறமையான நாடகக் கலைஞனால் ஒரு பெரிய நாடகக் கம்பெனி எப்படி அழிகிறது என்பது தான் ‘காவியத்தலைவன்’ படத்தின் கதை.

இப்படியொரு படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் வசந்தபாலனுக்கும், வசூல் எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதை உருவாக்க பணம் போட்ட தயாரிப்பாளர்களையும் முதலில் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

படம் முழுக்க நாடக மேடையைத்தான் காட்டியிருக்கிறார்கள். படத்தின் கதை ரொம்பவும் சாதாரணமானது தான். ஆனால், அதை உணர்ச்சிபூர்வமாகவும், நாம் இதுவரை பார்த்திராத அந்தக்கால நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையோடும் சொல்லியிருப்பதுதான் ‘காவியத்தலைவனி’ல் புதுமை. முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவும், அதிக பாடல்களுடனும் நகர்ந்தாலும் இடைவேளைக்கு முன்பு நாசருக்கும், சித்தார்த்துக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிபூர்வமான காட்சிக்குப் பிறகு வேகமெடுக்கிறது. இரண்டாம்பாதி விறுவிறுப்பாகவும், பல சுவாரஸ்யமான காட்சிகளுடனும் நகர்ந்து க்ளைமேக்ஸில் கண் கலங்க வைத்திருக்கிறது.

ஆனாலும் இரண்டரை மணி நேரம் நம்மால் உட்கார்ந்து அந்த காவியத்தை ரசிக்க முடிந்திருக்கிறது என்றால், அதற்கு முதல் காரணம் ஏ. ஆர். ரகுமான்தான். பின்னணி இசையிலும், பாடல்களிலும் தன் திறமையை முழுவதுமாக காட்டியிருக்கிறார் ரஹ்மான்.

சித்தார்த்தின் கேரியரில் இப்படம் கண்டிப்பாக பெரிய அளவில் இடம்பிடிக்கும். காளியப்பாவாக பின்னி எடுத்திருக்கிறார். நடிப்பதற்கு வாய்ப்புள்ள அருமையான கேரக்டர். அதை கச்சிதமாகவும் செய்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும், நடிப்பில் ஹீரோ ப்ரித்விராஜ்தான். பொறாமை உள்ள ஒரு கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். அர்ஜுனனாக, கர்ணனாக, நரகாசூரனாக, முருகனாக, கிருஷ்ணாக படம் முழுக்க மிரட்டியிருக்கிறார்கள் சித்தார்த்தும், ப்ரித்திவியும்.

கதாநாயகிகள் அனைகா, வேதிகாவுக்கு சின்ன வேடங்கள்தான். அனைகாவைவிட வேதிகா சிறப்பாக செய்திருக்கிறார். நாசர், பொன்வண்ணன் போன்றவர்களெல்லாம் பிறவிலேயே கூத்துக்கலைஞர்கள். அவர்களின் நடிப்பு எப்படியிருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தம்பி ராமையா, சிங்கம்புலி கொஞ்சம் சிரிக்க வைத்ததோடு, சீரியஸ் முகமும் காட்டியிருக்கிறார்கள்.

ஏ. ஆர். ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கலாம். மேலும் அற்புதமான பின்னணி இசையில் மேருகூட்டியிருக்கிறார். செட், ஆடை ஆலங்காரங்கள், ஒப்பனை ஆகியவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆக மொத்தத்தில் ‘காவியத்தலைவன்’ நாடகக் காவியம்…

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி