தொடர்ந்து, அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இருப்பினும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அவருக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு ஜூன் மாதம் திடீரென்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.
இதனிடையே, நடிகை குஷ்புவை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பா.ஜனதாவில் அவர் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. குஷ்பு பா.ஜனதாவில் சேர்வது உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் இதனை டுவிட்டரில் குஷ்பு மறுத்தார். பா.ஜனதாவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நடிகை குஷ்பு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சந்திப்புக்கு பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனும் இருந்தார். குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுவயது முதலே காங்கிரஸ் மீது எனக்கு ஈடுபாடு உண்டு என்றும் காங்கிரசில் இணைந்தது பெருமையாக உள்ளது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி மொத்த நாட்டின் நலனின் மீதும் எனது கவனம் இருக்கும். இந்தியாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் ஒரு கட்சி காங்கிரஸ் மட்டுமே. எனவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி