செய்திகள்,விளையாட்டு உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்!…

உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்!…

உலக டென்னிஸ்: நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்தார் ஜோகோவிச்!… post thumbnail image
லண்டன்:-8 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக்கில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

இதன் மூலம் ஆண்டின் இறுதியில் நம்பர் ஒன் இடத்தையும் 27 வயதான ஜோகோவிச் தக்க வைத்துக் கொண்டார். சீசனின் கடைசியில் அவர் முதலிடத்தில் தொடருவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 2011, 2012-ம் ஆண்டின் இறுதியிலும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் இருந்திருக்கிறார்.
ஆண்டின் கடைசியை ‘நம்பர் ஒன்’ இடத்துடன் 3-வது முறையாக நிறைவு செய்த 7-வது வீரர் என்ற பெருமையையும் ஜோகோவிச் பெற்றார். முன்னதாக ‘ஏ’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-0, 6-1 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை பந்தாடினார்.

உள்விளையாட்டு அரங்கில் பெடரரின் 250-வது வெற்றியாகும். ‘ஏ’ பிரிவில் மூன்று வெற்றிகளுடன் பெடரர் அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரி 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் டேவிட் பெரரை (மிலோஸ் ராவ்னிக் காயத்தால் வெளியேறியதால் சேர்க்கப்பட்டவர்) தோற்கடித்து 2-வது வெற்றியுடன் அரைஇறுதியை உறுதி செய்தார். அரைஇறுதி ஆட்டங்கள் இன்று நடக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி