செய்திகள்,விளையாட்டு ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…

ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!…

ஷேவாக், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போய் விட்டதா!… post thumbnail image
புதுடெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36 வயதான ஜாகீர்கான் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயாராவதற்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் தான் அச்சாரமாகும்.

மோசமான ஆட்டங்களால் கழற்றி விடப்பட்ட இவர்களது இடத்தை இப்போது இளம் வீரர்கள் முழுமையாக ஆக்கிரமித்து விட்டனர். ஒரு காலத்தில் ஷேவாக்–கம்பீர் உலகின் சிறந்த தொடக்க ஜோடியாக வலம் வந்தது. தற்போது தொடக்க வரிசையில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ரஹானே, முரளிவிஜய் போன்ற வீரர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகின்றனர். அவ்வப்போது பேட்டிங்கில் பிரமாதப்படுத்துகிறார்கள். ஷேவாக் கடைசியாக 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் டெஸ்டில் ஆடியிருந்தார். காயத்தால் அவதிப்படும் ஜாகீர்கானின் நிலைமையும் இதே தான். இவ்வாறு மூத்த வீரர்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்படுவதால் 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்று அடித்து சொல்லப்படுகிறது. உலக கோப்பை போட்டி நெருங்கி விட்டதால் இனி அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ய இந்திய கேப்டன் டோனி ஒரு போதும் விரும்பமாட்டார். அது மட்டமின்றி இவர்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையே அவ்வளவு தான்; இனி அணிக்குள் வரவே முடியாது என்ற கோணத்திலும் விமர்சிக்கப்படுகிறது.

முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் கூறும் போது, இது தான் ஷேவாக்குக்கு (ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்) கடைசி வாய்ப்பாக இருந்தது. அதிலும் தேர்வு செய்யப்படாததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அதே சமயம் கம்பீர் மறுபடியும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அவரால் இன்னும் சில ஆண்டுகள் விளையாட முடியும் என்றார்.இந்திய முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறுகையில், இந்திய அணிக்கு ஷேவாக் மீண்டும் திரும்புவது கடினமான ஒன்று தான். ஏனெனில் பல தொடக்க ஆட்டக்காரர்கள் வந்து விட்டனர்.இருப்பினும் நிறைய வீரர்கள் தங்களது 40 வயதுகளில் சர்வதேச கிரிக்கெட்டுகளில் ஆடியதை மறந்து விடக்கூடாது. ஆர்வம், வெறியுடன் தொடர்ந்து உழைத்தால் மீண்டும் அணிக்கு திரும்பலாம் என்றார். இவர்களுடன் சேர்த்து யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகிய சீனியர் வீரர்களுக்கும் இந்திய அணியின் கதவு மீண்டும் திறக்கப்படுவது சந்தேகம்தான்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி