செய்திகள்,விளையாட்டு 3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!… post thumbnail image
ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல் ஓவரின் கடைசி பந்தில் 4 ரன் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து சங்ககரா களம் இறங்கினார். இவர், தான் சந்தித்த முதல் பந்திலேயே அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் உமேஷ் யாதவே கைப்பற்றினார்.

3-வது விக்கெட்டுக்கு தில்சாவுடன் ஜெயவர்த்தனே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இதனால் இலங்கை அணி விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ரன் சேர்த்தது. ஆகவே இலங்கை அணி 22.4 ஓவரில் 100 ரன்னை கடந்தது. தில்சானும், ஜெயவர்த்தனேவும் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய தில்சான் 53 ரன்னில் அம்பதி ராயுடு பந்தில் ஆட்டம் இழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஜெயவர்த்தனேவுடன் கேப்டன் மாத்யூஸ் களம் இறங்கியுள்ளார். ஆனால் அவர் 10 ரன்களில் நடையைக் கட்டினார்.அதன்பிறகு பிரியான்ஞன் ஜோடி சேர்ந்தார். இவரும் 2 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் விளையாடிய ஜெயவர்தனே 109 பந்தில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். இது அவருக்கு 17-வது சதமாகும். தொடர்ந்து விளையாடிய அவர் 118 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் இலங்கை 48.2 ஓவரில் 242 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய தவான்- ரகானே ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி 12 ஓவரில் 62 ரன் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது.ரகானே 47 பந்தில் 5 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவானுடன், அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். நன்றாக விளையாடிய ராயுடு 35 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு கோலி களம் இறங்கினார்.தவான் 91 ரன் எடுத்த நிலையில் குலசேகரா பந்தில் ஆட்டம் இழந்தார். வீராட் கோலி சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 53 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் சகா ஜோடி சேர்ந்தார். இந்தியா 44.1 ஓவரில் 245 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரெய்னா 18 ரன்னுடனும், சகா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி