அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!… post thumbnail image
புதுடெல்லி:-கருப்பு பணம் தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் உடனடியாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது குறித்து டெல்லியில் நிதிமந்திரி அருண்ஜெட்லியிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:–
பிரச்சினை கிடையாது

வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள அனைவருடைய பெயரையும் வெளியிடுவதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவர் ஒருவரையும் பாதுகாக்க நினைக்கவில்லை. இதில் உண்மையை கொண்டு வரவேண்டும் என்பதே மத்திய அரசு விரும்புகிறது. மேலும், குற்றம் புரிந்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் நாங்கள் ஏற்கனவே கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை ஒப்படைத்து விட்டோம். எனவே, இந்த பட்டியலை நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது?

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் மீட்கப்படும் என்பதை பா.ஜனதா தேர்தல் வாக்குறுதியாக அளித்து இருந்தது. அதன்படி கறுப்பு பணம் பதுக்கிய அனைவருடைய பெயர் பட்டியலையும் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மத்திய அரசு ஒப்படைத்து விட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்.இவ்வாறு அவர் கூறினார். இதன்படி கருப்பு பணம் பதுக்கிய 600 பேரின் பெயர் பட்டியலை ‘சீல்’ வைத்த கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்கிறது. அந்த பட்டியலை வெளியிடுவதா இல்லையா என்பதை சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்யும்.

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் அனைவருடைய பெயரையும் கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருப்பதை காங்கிரஸ் வரவேற்று உள்ளது.இது குறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், கட்சியின் ஊடகத்துறை தலைவருமான அஜய் மக்கான் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. குறிப்பிட்ட சிலருடைய பெயரை மட்டும், வேண்டுமென்றே வெளியிடுவது சரியல்ல என்று நாங்கள் ஏற்கனவே திரும்பத் திரும்ப கூறி வந்திருக்கிறோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி