செய்திகள்,விளையாட்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!…

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!…

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி!… post thumbnail image
தர்மசாலா:-இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இரு அணியிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக அக்ஷர் பட்டேலும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ரவி ராம்பாலுக்கு பதிலாக ஜாசன் ஹோல்டரும் சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் வெய்ன் பிராவோ முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ஷிகர் தவானும், ரஹானேவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவிய போதிலும், பேட்டிங்குக்கும் உகந்ததாகவே காணப்பட்டது.

வேகப்பந்து வீச்சாளர் ஹோல்டரின் பந்து வீச்சில் சிக்சரை பறக்கவிட்ட தவான், ஜெரோம் டெய்லரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதே போல் ரஸ்செலின் ஓவரில் ரஹானே 3 பவுண்டரி ஓடவிட்டு உற்சாகப்படுத்தினார்.முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் (35 ரன், 35 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரஸ்செல் வீசிய எழும்பி வந்த (பவுன்சர்) பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். ரஸ்செலின் அடுத்த ஓவரில் இன்னொரு பவுன்சரில் ரஹானேவும் (38 ரன்னில் இருந்த போது) காலியாகி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை டெய்லர் வீணடித்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட் ரஹானே தனது 7-வது அரை சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 142 ரன்களை தொட்ட போது, ரஹானே 68 ரன்களில் (79 பந்து, 7 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார்.இதன் பின்னர் கோலியுடன் சுரேஷ் ரெய்னா கைகோர்த்தார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நொறுக்கினார்கள். ஆரம்பத்தில் இருந்தே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அதிகமான ‘பவுன்சர்’களை போட்டனர். ஆனால் அவர்களின் ‘பவுன்சர்’ யுக்திக்கு பலன் கிடைக்கவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் பவுன்சர்களை நெருக்கடியின்றி சமாளித்து அசத்தினர். இதனால் இந்தியாவின் ரன் குவிப்பை எதிரணியால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரெய்னா, கோலியின் சரவெடியில் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்ததுடன், மைதானமும் ரசிகர்களின் குதூகலத்தால் ஆர்ப்பரித்தது. வெய்ன் பிராவோவின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 19 ரன்களை சேகரித்தனர். அபாரமாக ஆடிய ரெய்னா 71 ரன்களில் (58 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் டோனி ஆட வந்தார்.

மறுமுனையில் விராட் கோலி தனது 20-வது சதத்தை பூர்த்தி செய்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவரது 3-வது சதமாகும். 101 ரன்னில் கோலி கேட்ச் கண்டத்தில் இருந்தும் தப்பினார். இதற்கிடையே டோனி 6 ரன்னில் வெளியேறினார். ஆனாலும் கோலியின் பிரமாதமான ஆட்டம் இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. கடைசி பந்தில் ரன்-அவுட் ஆன கோலி 127 ரன்கள் (114 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. கடைசி 13 ஓவர்களில் மட்டும் நமது அணி 132 ரன்களை திரட்டியது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சும், பீல்டிங்கும் நேற்று படுமோசமாக இருந்தது. குறிப்பாக கணிசமான கேட்ச்சுகளையும், ரன்-அவுட்டுகளையும் நழுவவிட்டது அவர்களுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் வெய்ன் சுமித் டக்-அவுட் ஆகி ஏமாற்றினார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மர்லன் சாமுவேல்ஸ் மட்டும் தனது 7-வது சதத்தை அடித்து மிரட்டினாலும், அது அந்த அணியை கரைசேர்க்க போதுமானதாக இல்லை. சாமுவேல்ஸ் (112 ரன், 106 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) கடைசி விக்கெட்டாக கிளீன் போல்டு ஆனார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. விசாகப்பட்டினத்தில் நடக்க இருந்த 3-வது ஆட்டம் புயல் மழையால் ரத்தானது. இத்துடன் எதிர்பாராதவிதமாக வெஸ்ட் இண்டீசின் பயணம் நிறைவுக்கு வந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி