செய்திகள்,திரையுலகம் குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்…

குறையொன்றுமில்லை (2014) திரை விமர்சனம்… post thumbnail image
நாயகன் கிருஷ்ணா தனியார் கம்பெனியில் புராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்குள் ஒரு லட்சியம் இருக்கிறது. அதாவது, விவசாயத்தில் சரியாக சம்பாதிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதே கிருஷ்ணாவின் லட்சியம். இதற்காக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரிடையாக அவர்களே விற்பனை செய்து, அவர்களை முதலாளியாக்கிட வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்து வருகிறார்.தனது லட்சியத்தை சக ஊழியர்களிடம் சொல்லி ஆலோசனை கேட்கிறார். இந்த லட்சியத்திற்கு அவரது உயரதிகாரி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இருந்தாலும் மற்றவர்கள் ஆதரவு தருவதால் தனது லட்சியத்தை நிறைவேற்ற சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார் கிருஷ்ணா. இவர் பயணம் செய்யும் அதே ரெயிலில் டாக்டரான நாயகி சந்தியாவும் பயணிக்கிறார். கிருஷ்ணாவின் சொந்த கிராமத்தில் மருத்துவராக பணிபுரிய சென்று கொண்டிருக்கும் சந்தியாவும், கிருஷ்ணாவும் ரெயிலில் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள். இந்த சந்திப்பு அவர்கள் கிராமத்திற்கு சென்ற பின்பும் தொடர்கிறது.ஊருக்கு சென்றதும் நாயகன் கிருஷ்ணா தனது லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுகிறார். மறுமுனையில் சந்தியாவும் அதே ஊரில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஒரு கட்டத்தில் சந்தியாவுக்கு கிருஷ்ணா மீது காதல் ஏற்படுகிறது. அந்த காதலை அவரிடம் சொல்ல முயற்சிக்கிறார்.ஏற்கெனவே காதலில் தோல்வியடைந்ததால் காதலை பற்றி யோசிக்காமல் தனது லட்சியத்திலேயே குறியாக இருக்கிறார் கிருஷ்ணா. அதனால் சந்தியாவால் தனது காதலை கிருஷ்ணாவிடம் சொல்ல முடிவதில்லை. இருந்தாலும் ஜாடைமாடையாக சொல்லிவிட்டு சென்னைக்கு செல்கிறாள் சந்தியா.
இந்நிலையில், சந்தியாவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. தனது காதலை சொல்லாமலேயே வெளிநாடு செல்ல முற்படுகிறாள். இதற்குள், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் கிருஷ்ணா தவித்து வருகிறார். இறுதியில், சந்தியா தனது காதலை கிருஷ்ணாவிடம் சொல்லி வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? கிருஷ்ணா தனது லட்சியத்தில் வென்றாரா? என்பதே மீதிக்கதை.

கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் கீதன் கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார். தான் நினைப்பதை மட்டுமே செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.காதல் என்றாலே பிடிக்காமல் இருந்து பின்னர் காதலில் விழும் நாயகி ஹரிதாவின் நடிப்பும் இயல்பாக இருக்கிறது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து, ரசித்து நடித்திருக்கிறார். ஒவ்வொரு முகபாவனையையும் முழுமையாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் கொடுத்து நடித்த விதம் அருமை. படத்தில் வரும் பிற கதாபாத்திரங்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.முதல் படத்திலேயே தான் சொல்ல விரும்பியதை தயக்கம் இல்லாமல், பயம் ஏதும் இல்லாமல் தெளிவாக சொல்லிய இயக்குனர் கார்த்திக் ரவிக்கு பாராட்டுக்கள். படத்தில், மது குடிப்பது, சிகரெட் குடிப்பது, பெண்களை தவறாக பேசுவது, கொச்சை வார்த்தைகள் இல்லாமல் ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார். விவசாயத்தின் மேன்மையை சொல்லும் இந்த படத்தை படமாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை. ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.அசோக்குமாரின் ஒளிப்பதிவு அற்புதம். ரமணுவின் பின்னணி இசை காதுகளுக்கு இனிமையாக இருந்தாலும், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘குறையொன்றுமில்லை’ பார்க்க வேண்டிய படம்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி